உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            தெளியப் படூஉ முளிவில் செய்தொழிற்
           சிலதரு மியவருஞ் சிந்து தேசப்
     65    பலவகை மரபிற் பாடை மாக்களும்
           ஆய்நல மகளிர் வேய்நலம் பழித்த
           தோடர வந்த வாய்தொழி லாளரோ
           டென்னோர் பிறருந் துன்னினர் சுற்ற
           ஏவற் கமைந்த காவற் றொழிலொடு
     70    கைக்கோ லிளையருங் கணக்குவினை யாளரும்
           மெய்க்கோண் மள்ளரு மீளி மாந்தரும்
 
              (சிலதர் முதலியோர் செயல்)
             63 - 71 :  தெளிய...........மாந்தரும்
 
(பொழிப்புரை) நன்கு ஆராய்ந்து தெளியப்படும் கேடில்லாத ஏவற்றொழிலைச் செய்கின்ற பணியாளரும், இசைவாணரும், சிந்து நாட்டினராகிய பலவேறு முறைமையினையுடைய மொழிகளையுடைய மாந்தரும், அழுகும் பெண்மை நலமுமிக்க இளமகளிருடைய மூங்கிலின் அழகைப்பழித்த தோளைத் தொய்யில் முதலியவற்றான் ஒப்பனை செய்யும் பொருட்டு வந்த நுண்டொழிலாளரும், இன்னோரன்ன பிற எத்தகைய பணிகளையும் செய்வோரும் நெருங்கிச் சூழாநிற்ப, ஏவுதற்கென அமைக்கப்பட்ட காவற்றொழிலையும் உடைய கையிற் பிரப்பங்கோல் ஏந்திய இள மறவரும் கணக்குத் தொழிலாளரும் மெய்காப்பாளராகிய மறவரும் தலைமையுடைய மாந்தரும் என்க.
 
(விளக்கம்) தெளியப்படூஉம் சிலதர், முளிவில் செய்தொழில் சிலதர் எனத் தனித்தனி கூட்டுக தெளியப்படுதலாவது நல்லொழுக்கமும் நற்பண்பும் உடையராக ஆராய்ந்து தெளியப்படுதல் என்க. முளிவு - கேடு. சிலதர் - பணியாளர். இயவர் - முரசு முதலிய முழக்குவோர். சிந்து நாட்டிலிருந்து வந்த பலவேறு மொழிபேசும் மாந்தர் என்ற வாறு. அவ்வம்மொழிகளில் அயல் நாட்டினருடைய செய்திகளைக் கேட்டறியும் பொருட்டு மொழிபெயர்த்துக் கூறுவோர் இவர் என்க. ஆய் -அழகு. நலம் - பெண்மைநலம். அவை நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலியன என்க தோள்தர - தோளை ஒப்பனை செய்ய. ஏவப்பட்ட காலம் ஒழிய ஏனைக்காலத்தே காவற்றொழில் செய்பவர் என்பார், ஏவற்கமைந்த காவற்றொழிலொடு கைக் கோலிளையர் என்றார். கோல் - பிரப்பங்கோல். மெய்க்கோள் மள்ளர் - மெய்காப்பாளராகிய மறவர். மீளி - தலைமைத்தன்மை. இவர். இத்தொழிலாளர் தலைவர் என்க.