உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            நள்ளிரு ணடைப்பிடி யூர்ந்த நலிவினும்
           பள்ளி கொள்ளாப் பரிவிடை மெலிவினும்
           கவர்கணை வேடரொ டமர்வினை வழியினும்
           பல்பொழு துண்ணாப் பசியினும் வருந்திய
     85    செல்வக் காளை வல்லவன் வகுத்த
           வாச வெண்ணெய் பூசிப் புனைந்த
           காப்புடை நறுநீர் காதலி னாடி
           யாப்புடைத் தோழரொ டடிசி லயில
 
             (உதயணன் நீராடி உண்ணல்)
            81 - 88 :  நள்ளிருள்.........அயில
 
(பொழிப்புரை) நள்ளிருளிலே விரைந்த நடையினையுடைய பத்திராபதிமிசையிருந்து அதனைச் செலுத்தியதனாலுண்டான உடல் நலிவினானும் கழிந்த இரவெல்லாம் துயில் கொள்ளாதே வருந்திய மெலிவினாலும், பகைவர் உயிர்கவரும் கொடிய கணையையுடைய வேடரோடு போர்த்தொழில் செய்தமையானும் பலபொழுதுகள் பட்டினியிருந்தமையானும் பெரிதும் வருந்திய செல்வமிக்க காளை போல்வானாகிய உதயணகுமரன் அவ்வருத்தந்தீர்க்கும் மருந்தாக மருத்துவ நூல்வல்லோன் இயற்றித்தந்த நறுமணங்கமழும் வெண்ணெயை உடலெங்கும் தடவிக் கொண்டு பொலிந்த காவலையுடைய நறிய நீரிலே விருப்பத்தோடு ஆடி அன்புப்பிணிப்புடைய வயந்தகன் இடபகன் முதலிய நண்பர்களோடே அடிசிலை உண்ணா நிற்ப என்க.
 
(விளக்கம்) அமர்வினை - போர்த்தொழில். காளை - உதயணன். வல்லவன் - மருத்துவநூல் வல்லான். மருந்தாக வகுத்த வெண்ணெய் என்க. புனைந்த - பொலிந்த. காப்புடை - நன்கு பாதுகாத்தலையுடைய. தோழர்-வயந்தகனும் இடபகனும் முதலியோர். அயில - உண்ண.