உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            தேம நெடுங்கரை யெய்தி யாமத்து
           மதியம் பெற்ற வானகம் போலப்
     110    பொதியவிழ் பூந்தார்ப் புரவலற் றழீஇச்
           சுரமுத னிவந்த மரமுத றோறும்
           பால்வெண் கடலின் பனித்திரை யன்ன
           நூல்வெண் மாடங் கோலொடு கொளீஇ
           மொய்த்த மாக்கட் டாகியெத் திசையும்
     115    மத்த யானை முழங்கு மாநகர்
           உத்தர குருவி னொளியொத் தன்றால்
           வித்தக வீரன் விறற்படை வீடென்.
 
                     (இதுவுமது)
            108 - 117 :  யாமத்து..........வீடென்
 
(பொழிப்புரை) யாழறி வித்தகனாகிய அவ்வுதயணனுடைய மறமிக்க படைவீடானது அவ்வழியிலே உயர்ந்த மரத்தடிகள் தோறும் வெள்ளிய பாற்கடலின் குளிர்ந்த அலைகள் போன்று நிரல்நிரலாகத் தறிகளிலே கட்டிய நூலானியன்ற படாங்களாலே இயற்றப்பட்ட வெண்மாடங்களிலே செறிந்த மாந்தர்களையுடைய தாய், எந்தப் பக்கங்களினும் மதயானைகள் முழுங்காநின்று அந்தப் பெரிய நகர் மேலும் கட்டவிழ்ந்த மலர்மாலையணிந்த மன்னனையும் பெற்று இராப் பொழுதிலே (உரோகிணியோடு) நிறைதிங்களைப் பெற்ற வானகம் போன்றும், உத்தரகுருவைப் போன்றும், ஒளியும் இன்பமும் உடையதாயிற்று; என்க.
 
(விளக்கம்) படைவீடாகிய மாநகர் என்க. ஒளியுடைமைக்கு மதியம் பெற்ற வானகத்தையும் இன்பப் பேற்றிற்கு உத்தரகுருவையும் கொள்க

             57. படைவீடு முற்றிற்று