உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
   15    பணைத்த வெருத்திற் பைங்கட் செயிர்நோக்
         கணைப்பக் கண்டத னணிநிழற் சீற்றத்து
         நீல மால்வரை நிமிர்ந்துநடந் தன்ன
         கோலக் குஞ்சரங் கொள்ளப் பண்ணிப்
         பாகர் தருதலிற் பணையெருத் தேறிக்
   20    கருமுகின் மருங்கி னிருளறுத் தேர்தரும்
         வெம்மைச் செல்வன் மேனிலை பெற்ற
         தண்மைத் திங்களிற் றகைக்குடை நிழற்ற
         உதையண குமர னொளிபெறத் தோன்றப்
 
              (இதுவுமது)
          15 - 23: பைங்கண்..........தோன்ற
 
(பொழிப்புரை) பசிய கண்களையும் செயிர்த்த பார்வையினையும் தன்னைத் தறியிடத்தே அணைக்குங்காலத்தே தான் கண்ட தனது அழகிய நிழலையே பகையானையென்று கருதி வெகுளாநின்ற வெகுளியையும் உடையதாய், நீலநிறமுடைய பெரிய மலையொன்று நிமிர்ந்து நடப்பதுபோன்ற தோற்றமுடைய களிற்றியானை யொன்றனைப் பாகர்கள் அழகு மிகும்படி ஒப்பனை செய்து கொணர்ந்து நிறத்துதலாலே, உதயணகுமரன் அக்களிற்றினது பருத்த எருத்தின் மிசை ஏறி வீற்றிருப்பவும், மேலே அழகிய கொற்ற வெண்குடை நிழற்றவும் அக்காட்சி கலிய முகிலின் உச்சியின்மேலே உலகத்தின் இருளை அகற்றி எழுச்சியுறாநின்ற வெப்பச்செல்வத்தையுடைய ஞாயிற்று மண்டிலத்தின் மேலே குளிர்ந்த திங்கண் மண்டிலம் நிலைபெற்றாற் போன்று ஒளிபெற்றுத் தோன்றாநிற்ப என்க.
 
(விளக்கம்) செயிர்நோக்கு : வினைத்தொகை. செயிர்த்த - சினந்த. தறியில் அணைக்குங்காற் றான்கண்ட தன்னிழல் என்க. கோலம் - தோற்றம். குஞ்சரம் - யானை. பண்ணி - ஒப்பனை செய்து. கருமுகில் களிற்றிற்கும் ஞாயிற்றுமண்டிலம் உதயணனுக்கும் திங்கள் மண்டிலம் வெண்குடைக்கும் உவமை. இவ்வுவமை மிகவும் இனிதாதலுணர்க. வெம்மைச் செல்வன் - ஞாயிறு.