உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           நாண்மீ னொழுக்குங் கோண்மீன் கோப்பும்
           கரந்துறை கோளொடு நிரந்தவை நிறீஇயவற்
           றேழ்ச்சியு மிறுதியுஞ் சூழ்ச்சியு முணர
           அரும்பொறி மண்டல மகவயி னியற்றிப்
     60    புலமை யுணர்ந்து புலங்கெழு நுட்பத்துப்
           பெரும்பொறிப் பாவை மருங்கி னிறீஇ
           முடியு மடியு முறைமையிற் புனைந்து
           கொடியு மலருங் கொள்வழி யெழுதிப்
 
             (இதுவுமது)
         56 - 63: நாண்மீன்..........எழுதி
 
(பொழிப்புரை) நாளாகிய விண்மீன்களின் இயக்கமும் கோள்களாகிய விண்மீன்களின் தொடர்ப்பாடும், மறைந்துறைகின்ற கோள்களோடே பரவியவையாக அமைத்து அவற்றின் தோற்றமும் மறைவும் சூழ்ந்து வருதலும் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவற்றை இயக்காநின்ற செயற்கரிய பொறியையுமுடைய வான மண்டிலத்தை உள்ளே மேற்பக்கத்தே இயற்றிவைத்துப் புலமைப் பண்பினையுணர்ந்து அறிவிலே பொருந்து நுட்பத்தோடே இயந்திரப் பாவைகளைச் செய்து பக்கங்களிலே நிறுத்தி வைத்து முடியையும், அடிப்பகுதியையும், முறைமையாலே ஒப்பனை செய்து பூங்கொடியும் மலர்களும் ஆகிய ஓவியங்களை எழுத வேண்டிய இடங்களிலே வரைந்து என்க.
 
(விளக்கம்) நாண்மீன் - அசுவினிமுதலியன; கோள் மீன் - ஞாயிறு முதலியன. கரந்துறைகோள் - மறைவெய்திய கோள்கள். ஏழ்ச்சி - எழுச்சி தோற்றம். இறுதி - மறைவு - சூழ்ச்சி. உலகினைச் சூழ்ந்துவரும் வகை. மீன் முதலியவற்றை மணிமுதலியவற்றான் அமைத்து அவைகள் இயங்கும்படி அரும் பொறியும் அமைத்தென்க பொறிப்பாவை-தாமே அகத்திருப்பார்க்கு மாலை சூட்டியும் வெள்ளடையீந்தும் பனிநீர் தெளித்தும் சாமரரையிரட்டியும் சந்தனம் பூசியும் திலகமிட்டும் உபசரிக்கும் இயந்திரப்பாவைகள் என்க. முடி - வண்டியின் மேற் பகுதி. அடி - அடிப்பகுதி..