உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           பிடியுங் களிறும் பிறவு மின்னவை
     65    வடிமாண் சோலையொடு வகைபெற வரைந்து
           நயத்திறம் பொருந்த நாடகங் கண்டும்
           விசித்திர வனப்பின் வீணை யெழீஇயும்
           பொன்னு மணியும் பன்மலர்த் தாரும்
           திருத்தி யணிந்து மருப்புநெய் பூசிச்
     70    சேணெறி செல்லக் கோணெறி கொளுத்தி
 
             (இதுவுமது)
        64 - 70: பிடியும்.........கொளுத்தி
 
(பொழிப்புரை) பெண்யானையும், களிற்றியானையும், இன்னோரன்ன பிறவிலங்குகளும் அழகுமாட்சிமைப்பட்ட சோலைகளோடே வகை வகையாக வரைந்து, மெய்ப்பாடுகளாகிய நயமெலாம் திறம் படத் தோன்றும்படி நாடகமாடும் கூத்தரையும், விறலியரையும் வரைந்து காட்டி நாடகக் காட்சியினை வரைந்து வைத்தும், வித்தகமான அழகையுடைய வீணையை வரைந்தும். பொன்னானும் மணியானும் பல்வேறு மலர்மாலைகளானும் திருத்தமுற அழகுசெய்து கொம்புகளிலே நெய்பூசி நெடுந்தொலை செல்லும் கொள்கைக் கேற்ப வழியைச் சீர்செய்து என்க.
 
(விளக்கம்) பிடிமுதலியன ஓவியங்கள் என்க. நாடகம் கண்டு-நாடகக் காட்சியை அமைத்து என்றவாறு. வீணை எழீஇழியும் - எழுதியும் என மருவிற்று. எழீஇயும் - மருப்பு - வண்டியுறுப்பில் ஒன்று போலும். பூசுதல் அச்சில் சக்கரம் நன்கு உருளுதற் பொருட் டென்க.