உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           காட்டக மருங்கின் வீட்டிட மமைகெனப்
     80    பெருமலைச் சாரற் சீறூர் வாழும்
           காலக் குறும்ப ரோலைக் தூதிற்
           பெரும்பொறி யண்ண லரும்பொறி யொற்றிக்
           குழிப்படு வேழக் கூன்மருப் பிரட்டையும்
           வரைப்படு தேனுஞ் சினைப்படு கனியும்
     85    வீணைத் தண்டும் வேய்படு முத்தும்
           கானத் தகிலு மேனத் தெறியும்
           பொறிப்புலித் தோலு மறுப்பிய லூகமும்
           மந்திப் பிணையொது மற்றவை பிறவும்
           தந்திறை தந்து முந்துசிறைப் பட்ட
 
           (குடிகள் செயல்)
        79 - 89: காட்டகம்.......திறைதந்து
 
(பொழிப்புரை) காட்டிலேயே தமக்கு வீடுகள் அமைவனவாக வென்று அவ் வாழ்க்கையை விரும்பி அக்காட்டினூடே பெரிய மலைச்சாரலிலுள்ள சீறூர்களிலே வாழுகின்ற உற்றுழியுதவுகின்ற குறும்பராகிய குறுநிலமன்னர்கள் முன்னர் இடபகன் தூதர்வாயிலாய் விடுத்த கட்டளைத் திருமுகத்தின்கண் உதயணனுடைய பெரிய இலச்சினையாகிய அரிய அரசிலச்சினையினை அறிந்து குழியிலே அகப்பட்ட யானைகளினது வளைந்த இணை மருப்புகளும், மலையிலே உண்டாகின்ற தேனும், மரக் கொம்புகளிலே காய்த்துக் கனிந்த கனிகளும், வீணைக்குரிய தண்டுகளும், மூங்கிலிலே தோன்றிய முத்தும், காட்டிலுள்ள அகிற்குறடும்; பன்றிக்கொம்பும், புள்ளியடைய புலித்தோலும், மறுவையுடைய தோளையுடைய கருங்குரங்கும், மந்தியாகிய பெண் குரங்கும், இன்னோரன்ன பிறவும் ஆகிய அரும் பொருள்களைத் தாம் இறுக்குந் திறைப்பொருளாகக் கொணர்ந்து கொடுத்து என்க.
 
(விளக்கம்) சீறூர் - சிறுகுடி. காலங்களிலே உதவும் துணைப்படை ஞராகிய குறும்பர் என்க. பெரும்பொறிஎன்றது தலைசிறந்த இலச்சினை என்றவாறு. அண்ணல்: உதயணன். இடபகன் எனினுமாம். யானை பிடிப்போர் குழியில் வீழ்த்துப் பிடித்தல் மரபு. இரட்டைமருப்பென்க. வீணைத்தண்டிற் கேற்ற மரம் என்றவாறு, வீணைத்தண்டிற் சிறந்த மரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய மரத்துண்டுகளைக் கொடுவந்தார், என்பது. அவையிற்றைச் "சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு, நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லியலாய், உத்தம மான மரங்க ளிவையென்றார், வித்தகயாழோர் விதி" எனவும், அம்மரந்தானும்; "தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும், உளதாய் ஒருங்கூன மின்றி, அளவு முதிராதிளகாது மூன்றாங்கூறாய, அதுவாகில் வீணைத்தண் டாம்" எனவரும் வெண்பாக்களானுணர்க. (சீவக - 719. நச். உரைவிளக்கம்) ஏறி - கோடு. ஊகம் - கருங்குரங்கு. இறை - அரசற்குக் கொடுக்கும் கடமைப்பொருள். இப்பகுதியோடு,

"யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி தாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமுங் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையி னிருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்(கு)
ஏழ் பிறப்படியேம் வாழ்கநின் கொற்றம்,"

எனவரும் பகுதியை ஒப்புக் காண்க. (சிலப்: 25: 37: 56)