உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
           பயங்கெழு நன்னாடு பயம்பல தீரப்
           புகுந்தனை புகன்றுநின் புதல்வரைத் தழீஇ
           ஒன்னா மன்னனை ஓடுபுறங் கண்டு
     35    நின்னகர் நடுவண் மன்னுகென் போரும்
 
        32 - 35 ;  பயங்கெழு நன்னாடு,,,.,,,,,,மன்னுகென் போரும்
 
(பொழிப்புரை) பல்வேறு வளங்களும் பொருந்திய நல்லநாடு அவ் வளமெல்லாம் கெடும்படி, பிரச்சோதனனாகிய பகைவேந்தன் சிறையிடைப் புக்கனை; இனிப் பெருமானே! நீ நினது பகை மன்னனாகிய ஆருணிவேந்தனை வென்று நினது குடிமக்களை விரும்பி அளிசெய்து நின் தலைநகராகிய கௌசாம்பியின்கண் இருந்து நீடூழி நிலைத்து வாழ்வாயாக! என்று வாழ்த்துவோரும் என்க,
 
(விளக்கம்) 32, பயம்-பயன், ஈண்டு வளம்.
    33. புகுந்தனை-சிறைபுக்கனை. புகன்று - விரும்பி. நின் புதல்வர்-நின் குடிமக்கள். தழீஇ-அனைத்து ; அணைத்தல்,  இன்சொற் சொல்லுதலும் தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும்  முதலாயின,
      ''குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
      அடிதழீஇ நிற்கும் முலகு''          (குறள் - 244)
என வரும் திருக்குறளை நினைக.
    34. ஒன்னா மன்னன்-பகை மன்னன். அவன், பாஞ்சால நாட்டரசனாகிய ஆருணி என்பவன். ஓடுபுறம்-தோற்றோடுங்காற் றோன்றும் முதுகு. ஓடுபுறங்கண்டு என்றது வென்று என்றவாறு.
    35. நின்நகர்-நின்னுடைய கோசம்பி நகரத்தை. மன்னுதல் - நீடூழி நிலைபெற்று வாழ்தல்.
    மேல் ; அம் மக்கள் வாசவதத்தையைப் பாராட்டுகின்றனர்.