உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
           வியன்கண் ஞாலத் தியன்றவை கேண்மின்
           நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
           நன்றே யாகி நந்தினு நந்தும்
     60    நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
           அன்றாய் மற்றஃ தழுங்கினும் அழுங்கும்
           தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்குத்
           தீதே யாகிந் தீயினுந் தீயும்
           தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு
     65    ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆமெனச்.
           சேயவர் உரைத்ததைச் செவியிற் கேட்கும்
 
        57 - 66 ;  வியன்கண் ஞாலத்து,,,,,,,,,செவியிற்கேட்கும்
 
(பொழிப்புரை) 'அகன்ற இடத்தையுடைய இவ்வுலகத்தின் கண்ணே நிகழாநின்ற சில உண்மையை எல்லீரும் கேளுங்கள் ! வரும்பொழுது, நன்மையாக வந்ததொன்று ஒருவனுக்கு மேலும் மேலும் நன்மையேயாகிப் பெருகினும் பெருகும்; வரும்பொழுது நன்மையாக  வந்ததொன்று ஒருவனுக்குத் தீமையாக மாறி அவனது முன்னைய நன்மையோடே அழியினும் அழியும்; வரும்பொழுது ஒருவனுக்குத் தீமையாக வந்ததொன்று மேலும் மேலும் தீமையாகவே அவனைத் துன்புறுத்தினும் துன்புறுத்தும்; அன்றி ஒருவனுக்கு வருங்கால் தீமையாக வந்த தொன்று அவனுக்குக் குற்றமற்ற நன்மைதரும் பெரிய பொருளாக ஆக்கமுறினும் ஆக்கமுறும்' என்று உயர்ந்தோர் அறிவுறுத்தும் மொழியினை யாம் கேள்விமாத்திரையானே கேட்டிருப்போம்; என்க.
 
(விளக்கம்) 57. வியன்கண்-அகலிடம். ஞாலம்-உலகம். இயன்றவை - நடவாநின்ற உண்மைகள்.
    58. நன்று--நன்மை. இன்பந்தருவனவாக வந்த ஒரு செயல். என்க.
    59. நந்துதல் - பெருகுதல்
    61, அன்றாய் - நன்மையல்லாத தீமையாய்,
    63, தீய்ப்பினும் தீய்க்கும் என்னும் பிறவினைகள் தீயினும். தீயும் எனத் தன்வினையாய் நின்றன,
    65. ஆசில்-குற்றமற்ற.
    66. சேயவர்- உயர்ந்தோர். கேட்கும் -கேட்டிருப்பேம்.