உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           நன்னாள் இதுவெனப் பன்னா டறியப்
           பசும்பொற் பலவார் விசிந்து பிணிஉறீஇக்
           கோதை முத்தொடு தாமந் ததைஇ
           ஏற்றுரி போர்த்த இடியுறழ் தழங்குரல்
           கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
 
        25 - 29; நன்னாள் இதுவெனப்.,...கொற்றமுரசம்
 
(பொழிப்புரை)  நல்ல நாள் இஃதென்று பல நாட்டினரும் அறியும்படி, பசிய பொன்னிற வாராலே இறுகக் கட்டுதலுற்று முத்த மாலையும் மலர் மாலையும் அணியப்பட்ட உரிபோர்த்த இடிபோன்று முழங்கும் வெற்றி முரசத்தை என்க.,25.தலைநகரத்தே முரசறைந்து அறிவிக்கும் செய்தி பிற நாட்டு ஒற்றரானும் பிறரானும் பிறநாட்டும் பரவுதல் உண்மையின் பன்னாடறிய எனப் பட்டது.  
 
(விளக்கம்) 26. பசும் பொன்னிற மூட்டப்பட்ட பல வார் என்க. பிணியுறீஇ-கட்டி.
    27. கோதையாகிய முத்தம்; முத்து மாலை. ததைஇ-சூட்டி.
    28. ஏற்றுரி போர்த்த-காளையினது தோலாற் போர்க்கப்பட்டது. இடியை ஒத்து முழங்கும் குரலையுடைய முரசம் என்க. தழங்கு குரல்-தழங்குரல் என நின்றது.
    29, கோல் தொழில் - செங்கோல் நடத்தும் தொழில்.