உரை
 
2. இலாவாண காண்டம்
 
2, கடிக்கம்பலை
 
         
     30    பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலி யோச்சி
           முற்றவை காட்டுக் கொற்றவை பழிச்சித்
           திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
           பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
           செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்
     35    நறுவெண் சாந்தொடு மாலை அணிந்து
           மறுவில் வெண்டுகில் மருங்கணி பெறீஇ
           அணைமிசை அமர்தந் தஞ்சுவரு வேழத்துப்
           பணையெருத் தேற்றிப் பல்லவர் சூழத்
 
        30 - 38; பெரும்பணைக் கொட்டிலுள்...பணையெருத் தேற்றி
 
(பொழிப்புரை) பெரிய முரசக் கொட்டிலிலே அரசவையோர் காணும்படி கொற்றவைக்கு மடை கொடுத்து வாழ்த்தித் திருநாள், படை போர்மேற்செல்லும் நாள், மணநாள் என்னும் இந்நாள்களினன்றிப் பிற நாட்களிலே முரச முழக்குதலில்லாத செல்வத்தையும், சேனையையும், உடைய முதிய வள்ளுவன், வெண்மை நிறமுடைய சாந்தம் மாலை துகில் முதலியவற்றை அணிந்து கொண்டு, யானையின்மேல் அணையிடத்தே ஏறியிருந்து பருத்த அதன் எருத்தத்தில் ஏற்றி என்க.
நாடு அறிய முரசத்னத வள்ளுவ முதுமகன் அணிந்து பெறீஇ, வேழத்து அணை மிசை அமர்ந்து அதன் எருத்தத்தே ஏற்றி என இயைக்க.
 
(விளக்கம்) 30, பணைக் கொட்டில் - முரசமிருக்கும் கொட்டில்.
    31. முற்றவைக்கு அம்முரசினைக் காட்டி என்க. கொற்றவை வெற்றித்திருவாகிய இறைவி. பழிச்சி-வாழ்த்தி.
    35. மங்கலச்செய்தியை அறிவித்தற்கு அறிகுறியாக வெண்மை .நிறமுடைய சாந்த முதலியவற்றை அணிந்து என்க.
    37. அமர்தந்து; அமர்ந்து-இருந்து,
    38. பணை எருத்து-பருத்த பிடர்,