உரை
 
2. இலாவாண காண்டம்
 
2, கடிக்கம்பலை
 
         
   45    பல்களிற் றியானைப் படைப்பெரு வேந்தன்
        மெல்ளியற் குலமகள் மிடைமணிப் பைம்பூண்
        சிலம்பொலிச் சீறடீச் சென்றேந்து புருவத்
        திலங்கொளி வாட்கண் இன்னகைத் துவர்வாய்
        வாசவ தத்தையொடு வதுவை கூடிக்
   50   கோல நீள்மதிற் கொடிக்கோ சம்பி
        மாலை மன்னவன் மணமகன் ஆகும்
        காலை இதுவெனக் கதிர்மணிக் கடிப்பிற்
        கண்அதிர்ந் தியம்ப இண்மொழி பயிற்றிக்
        கல்லென அறையும் ஒல்லென் கம்பலை
   55  அறைந்தறி வுறீஇய பின்றை நிறைந்த
 
           45 - 55; பல்களிற் றியானைப்..,....பின்றை
 
(பொழிப்புரை)  களிற்றியானைப் படைகளையுடைய பெரிய மன்னனாகிய பிரச்சோதனனுடைய குலமகளாகிய மென்மையையும், அணிகலனையும், சீறடியினையும், புருவத்தி்னையும், கண்ணையும், இனிய நகையையும், பவழ வாயையும் உடைய வாசவதத்தையொடு மணம்புணர்ந்து கோசம்பி மன்னனாகிய உதயணன் மணமகனாகும் காலம் இஃதாம் என்று, குறுந்தடியாலே முரசத்தின் கண் அதிர்ந்து முழங்கும்படி கேள்விக்கினிய மொழிகளைக்கூறி அறையா நின்ற ஒல்லென்னும் ஆரவாரமுண்டாக  முழுக்கி அறிவுறுத்திய பின்னர் என்க.
 
(விளக்கம்) 45. வேந்தன் - பிரச்சோதனன்,
    46. குலமகளாகிய வாசவதத்தை என்க, மணிமிடை பைம் பூண் என மாறுக..
    47. சீறடி - சிறிய அடி. சென்றேந்து புருவம்- நீண்டுயர்ந்த புருவம்.
    48 இலங்காநின்ற ஒளியையுடைய வாள் போலும் கண் என்க. இனிய நகையினையுடைய பவழ வாய் என்க. துவர் - பவழம்.
    50. கோலஞ் செய்யப்பட்ட நீண்ட மதிலையும் கொடியினையும் உடைய கோசம்பி என்க, கோசம்பி - உதயணனுடைய தலைநகரம்,
    51, மாலை - வெற்றிமாலை, மன்னவன் ; உதயணன்.
    52. காலை - முழுத்தம். மணிவைத் திழைத்த குறுந்தடி.
    53, கண் - முரசத்தினுடைய கண். இன்மொழி - கேள்விக்கினிய மொழி என்றது திருமணச் செய்தியை.
    54 - கல்லென, ஒல்லென என்பன ஒலிக்குறிப்பு மொழிகள். கம்பலை உண்டாக அறைந்தென்க.
    55. அறிவுறீஇய -அறிவுறுத்திய.
    இனி. 54 முதல் 75 வரையில் அச்செய்தி கேட்ட மக்கள் தத்தமில்லத்தை ஒப்பனை செய்தல் கூறப்படும்.