உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           பவழப் பட்டத்துப் பளிக்குமணித் தூணின்
           திகழ்பொன் போதிகைச் செம்பொன் செழுஞ்சுவர்
     90    வெள்ளி வேயுள் வெள்ளியம் பலகைப்
           பீடுகை நிரைத்த மாட மறுகிற்
           கொடுப்போர் வீழ்த்த குங்குமக் குழையலும்
           தொடுப்போர் வீழ்த்த துவெள் ளலரும்
           வேதியர் கடைத்தலை வேள்விச் சமிதையும்
     95    வாதிகர் கடைத்தலை வாசச் சுண்ணமும்
           கலந்தோர் உதிர்த்த கலவைச் சாந்தமும்
           புலந்தோர் பரிந்ந புதுப்பூ மாலையும்
           சிறாஅர் வீழ்த்த செம்பொற் கண்ணியும்
           அறாஅ மறுகின் ஆவணப் பலியும்
     100    பசுங்காய் தெவிட்டும் பற்கூட் டரத்தமும்
           இயங்குநர் இன்புற இன்னவை பிறவும்
           காட்டெனக் கமர்ந்து கூட்டுநர் அமைத்த
 
        88 - 102; பவழப் பட்டத்து.,,.,,.,காட்டெனக் கமர்ந்து
 
(பொழிப்புரை) பவழப்பட்டத்தினையும் மணித்தூணையும். பொன் போதிகையினையும் பொன்சுவரையும் வெள்ளியால் வேயப்பட்ட கூரையினையும் நிரலாக இடப்பட்ட வெள்ளிப்பலகைகளாலாகிய இருக்கையினையும் மாடமாளிகைகளையுமுடைய கடைத் தெருவின்கண் வழங்குவோராற் சிந்தப்பட்ட குங்குமச்சாந்தமும். தொடுப்போர் சிந்திய மலரும், அந்தணர் முன்றிலிற்கிடக்கும் சமிதைகளும், வாதிகர் முன்றிலிடத்தே கிடக்கும் சுண்ணமும், மணப்பொருள் கூட்டுவோர் உதிர்த்த சாந்தமும், ஊடிய மகளிர் அறுத்துவீசிய மலர்மாலையும், சிறுவர்கள் போகட்ட பொன்மாலையும், வணிகரானே தெய்வத்திற் கிடப்பட்டபூ சனைப் பொருளும் தம்பலமும் ஆகிய இவற்றையும் ,இன்னோரன்ன பிறவற்றையும் குப்பை என்று கருதி (109) ஏவல்மகளிர் அவற்றைக் களைந்து என்க,
 
(விளக்கம்) 88 பட்டம்-ஈண்டுத் தூணிற்கிட்ட பூண்.பளிக்குத் தூணும் மணித்தூணும் என்க.
    89 போதிகை-ஒரு மாடத்துறுப்பு
    91. பீடிகை - கடை. நிறைத்த மாடப் பீடிகைமறுகு என மாறுக.
    92. குழையல் -சாந்து.
    93 தூவெள்ளலர்-தூய வெண்ணிற மலர்.
    95 வாதிகர் - வாசிகர்,  வாசனைப்பொருளைக் கூட்டுவோர்.
    96. ஆவணப்பலி - வணிகர்கள் மாலைப்பொழுதில் தெய்வத்திற்கிடும், பலிப்பொருள்."நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது,மல்லல் ஆவணம் மாலையயர" எனவரும் நெடுநல்  வாடையும் உணர்க. (43.3.)
    100. பசுங்காய் - பச்சைப்பாக்கு. பற்கூட்டரத்தம் - தம்பலம்.
    102, காட்டு - குப்பை; ' காட்டுக்களைந்து கலங்கழீஇ ' (ஆசாரக், 46,) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக, கமர்ந்து என்பது களைந்து என்னும் பொருட்டுப் போலும்.