உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           காட்டெனக் கமர்ந்து கூட்டுநர் அமைத்த
           கலவைக் கொழுங்களி எழுதுகள் அவித்து
           வெறிக்களங் கடுப்ப வீதியு முற்றமும்
     105    நிறைப்போது பரப்பி நெடுங்கடை தோறும்
           அணித்தகை சிதைத்தனர் இவரென ஆடும்
           முனித்தலைச் சிறாரை முன்னில் வாங்கித்
           தாயரைக் காட்டியவர் தவறெடுத் துரைக்கும்
           ஏவன் மகளிர் வாய்மொழிக் கம்பலும்
 
        102 - 109. கூட்டுநர் அமைத்த,,,,.,வாய்மொழிக் கம்பலும்
 
(பொழிப்புரை) மணங்கூட்டுவோராலே இயற்றப்பட்ட கொழுவிய சந்தனக் குழம்பாலே தெருக்களில் எழாநின்ற துகளை அவித்து, (101) செல்வோர் இன்புறும்படி வெறியாடுகளம் போலத் தோன்றும்படி தெருக்களிலும் முற்றத்திலும் நிறைந்த மலர்களைப் பரப்பி அணிசெய்து அம் முன்றிலிலே ஆடாநின்ற இளஞ்சிறாரை அழைத்துக் கொடுபோய் அவரவர் தாயர்க்குக்காட்டி இவர் யாம் செய்த அணிகளைச் சிதைக் தொழித்தனர் என்று அச்சிறார் செய்த பிழையினை அவர்க்கு எடுத்துக்கூறா நிற்கும் பணிமகளிரின் மொழிகளாலே எழுந்த ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) 102. கூட்டுநர் - மணப்பொருள் கூட்டும் வாசவர். ''வாதிகர் கடைத்தலை வாசச் சுண்ணமும்'' என முன்னும் வந்தது. (95) 
  103. கொழுங்களி - கொழுவியசந்தனக்குழம்பு. களியாலே துகளை அவித்தென்க.
  104. வெறிக்களம் - வேலன் வெறியாடுங்களம். ''நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும்வியலறை'' (149-50) என்றார் மலைபடு கடா அத்தினும்.
  105. நெடுங்கடை -நெடுய முன்றில்.
  106. அணித்தகை - ஒப்பனையழகு.
  107. முனித்தலைச்சிறார் - துறவிகளின் தலைபோன்று பேணப் படாத தலையினையுடைய சிறுவர். முன்றில் - முற்றம் (இல்முன்),
    (110. முதல் 138 வரை அருகன் கோயில் வருணனை.)