உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
         
     110    வண்ணக் கலிங்கத்துக் கண்ணறைக் கண்டம்
           தலையொடு தலைவர இலையடுக் கிரீஇக்
           கச்சுவாய் கோடித்து முத்துப்புரி நாற்றி
           ஒண்மணித் தாரொடு பன்மணிப் புளகம்
           விலங்கு நீளமும் இலங்கித் தோன்றி
     115    மிழற்றுபு விளங்கும் எழிற்பொலி வெய்த
           வல்வவன் புனைந்த பல்வகைக் கம்மத்து
           மங்கலப் பெருங்கொடி மங்குல்வா னத்துள்
 
        110 - 117 ; வண்ணக் கலிங்கத்துக்,,,,,பெருங்கொடி
 
(பொழிப்புரை) பல்வேறு வண்ணங்களையுடைய துகில்களாலே இயற்றப்பட்ட வண்ணச்சீலைகளை ஒன்றன் தலைப்பு மற்றொன்றன் தலைப்போடே பொருந்த இலைகளினது அடுக்குப் போலே அடுக்கிவைத்து, அவற்றின் விளிம்புகளை அழகு செய்து மேலும் முத்துவடங்களையும் ஏனை மணிமாலைகளையும் மணிவைத்தி்ழைத்த கண்ணாடிகளையும் தூங்கவிட்டு, அகலத் தானும் நீளத்தானும் விளங்கித்தோன்றி ஒலித்துத் திகழா நின்ற அழகானே பொலிவுறும்படி தொழில் வன்மையுடையவனாலே பல்வேறு தொழிற்றிறம்படக் புனைந்த மங்கலப்பெருங் கொடிகளை என்க.
 
(விளக்கம்) 110. வண்ணக்கலிங்கம் - நிறமூட்டப்பட்ட துகில். கண்ணறைக்கண்டம்- வண்ணங்களாலே இடமறுக்கப்பட்ட துணி .
    111, இலையடுக்கு - இயற்கையிலே செடிகொடிகளிலே காம்பின் கண் இலையடுக்கிருக்குமாறு என்க,
    112, கச்சுவாய் - அத்துகிலின் விளிம்பென்க, கோடித்தல் - ஒப்பனை செய்தல். முத்துப்புரி - முத்துவடம்.  மணித்தார் - ஏனை மணிமாலை. புளகம் - கண்ணாடி.
    114. விலங்கு - அகலம்(குறுக்கு). மணிமாலைகள் நாற்றியிருத்தலான் காற்றில் ஆடுங்கால் மிழற்றி என்க. மிழற்றுதல் - ஒலித்தல்.
    116, வல்லவன் - அத்தொழில்வன்மை பெற்றவன். கம்மம் - ஈண்டு ஒப்பனைத்தொழில்.