உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           கழைமுதற் கொளீஇக் கைபுனை வனப்பின்
     150    இழைமுதற் கொளீஇய எழில வாகிக்
           காம வல்லியுங் கதலிகை யணிந்த
           தாம வல்லியுந் தண்பெரும் படாகையும்
           காலேந் திரமுங் கைவயிற் பிரியா
           நூலேந் திரமு நோக்கினர் போகாப்
     155    பத்திப் படாமுஞ் சித்திரக் கொடியும்
           இன்னோ ரன்ன என்னோர் சேரியும்
           உறப்புணர்த் தார்க்குஞ் சிறப்பொலிக் கம்பலும்
           இடியுறழ் முரசின் இறைமகன் அணியும்
 
        149 - 158 ; கழைமுதற் கொளீஇக்........சிறப்பொலிக் கம்பலும்
 
(பொழிப்புரை) மேலும் மூங்கிற் கழியிலே கட்டி ஒப்பனை செய்த அழகுடையவாகிய காமவல்வி முதலிய கொடிகளையும், நாழிகை வட்டில் முதலிய பொறிகளையும், கண்டோர் போகாமைக்குக் காரணமான படாங்களையும், ஓவியமெழுதப்பட்ட கொடிகளையும், இன்னோரன்ன பிறவற்றையும் பலவேறு வகுப்பினர் வாழும் எல்லாச் சேரிகளினும் பொருந்தவைத்து மகிழ்ச்சியாலே ஆரவாரியாநிற்கும் சிறப்பாரவாரமும் என்க,
 
(விளக்கம்) கழி நுண்ணாளர் என்னோர் சேரியிடத்தும் மரம்பண்ணி நிறீஇ காமவல்லி முதலியவற்றைப் பொருந்தப்புணர்த்து ஆர்க்கும் கம்பலும் என்க.
    149, கழை - மூங்கில், இழை - நூற்கயிற்றுக்கு ஆகுபெயர். இருபுறத்தும்  மூங்கில் நட்டு (150) நூற்கயிற்றிலே யாத்த அழ குடையவாகி என்க.
    151. காமவல்லி - கற்பகத்தருவில் படரும் ஒரு கொடி. இஃது ஆகுபெயராய் ஒருவகைத் தோரணக்கொடியை உணர்த்தியது.  கதலிகை - துகிற்கொடி.
    152. தாமவல்லி - ஒருவகைத் தோரணக் கொடி, படாகை - அடையாளக்கொடி,
    153, காலேந்திரம் - நாழிகை வட்டில்,
    154, நூலேந்திரம் - கயிற்றால் இயங்கும் பொறிகள்.
    155. பத்தி - நிரல், பத்திப்படாம் - ஒருவகைத் துகிற்கொடி. சித்திரம் வரையப்பட்ட கொடியென்க. என்னோர் சேரியும் - பலவேறு வகைப்பட்ட மாந்தர் வாழும் எல்லாச்சேரியிலும் என்க,