உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
         
   165    குடிக்கணி கொடுக்குங் கொற்றத் தானை
         இடிக்கண் முரசின் எயர் பெருமகன்
         வதுவை நாப்பட் புதுவது புணர்ந்து
         நுந்தையர் தம்மொடு செலீஇ எந்தையர்
         வருக ஈண்டென வறிதின் ஓடும்
   170    தம்மமர் புதல்வரைத் தலையடி காறும்
         கம்மப் பல்கலங் கைபுனைந் தணிந்து
         செம்மலின் விடுக்குஞ் சிறந்த சாயல்
         அம்மென் கூந்தல் அரிவையர் கம்பலும்
 
        165 - 173.  குடிக்கணி கொடுக்குங்...,.,அரிவையர் கம்பலும்
 
(பொழிப்புரை) அரிவையர் அணிசெய்து கொள்ளாமல் வாளா ஓடாநின்ற தம் மக்களை, எந்தையீர்! இங்கே வருக! என்று அழைத்துப் பலவேறு அணிகலன்களாலும் தலைமுதலாக அடியீறாக அணிந்து அழகுறுத்தி, இனி, நீயிர் நும் தந்தையரோடு ஏயர்பெருமகன் திருமணவிழாவிற்குச் சென்று வருக ! என்று கூறி விடுத்தலாலே எழுகின்ற ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) 165 - 6. தான் பிறந்த குடியைப் புகழால் அழகு செய்பவனும், வெற்றியையுடைய படைகளையுடையவனும், இடி போன்று முழங்கும் வெற்றிமுரசினை யுடையவனும், ஏயர்குடித்தோன்றலுமாகிய உதயணன் என்க. 167. வதுவை - திருமண விழா நாப்பண் - நடுவே. புதுவது புணர்ந்து - புதிய ஒப்பனையோடு பொருந்தி என்க. 168. செலீஇ - சென்று. எந்தையர் என்றது மக்களை; விளி, 169, வறிதின் - அணியின்றி, 170. அமர் - விருப்பம், 171. கம்மத் தொழிலாலியற்றிய பலவேறு அணிகலன்களாலே என்க, 172, செம்மல் - சிறப்பு. சாயலையும் கூந்தலையும் உடைய அரிவையர் என்க.