உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           மணியரி அடக்கிய மாண்வினைப் பகுவாய்
           அணிமிழற் றரவத் தம்பொற் கிண்கிணி
           சிலம்பொடு சீறடிப் புறம்புதைத் தரற்றவும்
           அம்மென் மருங்கு லசைய அடிபரந்த
     210    கொம்மை கொண்ட தன்மைய வாகிக்
           கோங்கரும் பழித்த வீங்கிள மென்முலை
           உட்பட விட்ட வட்ட நுடக்கத்துச்
           சுண்ண இலேகை வண்ணஞ் சிதைய
           மண்ணிய நித்தில வடத்தொடு புரளும்
     215    பல்கலஞ் சுமத்தல் ஆற்றாது பையென
           ஒல்குபு நுடங்கும் ஒருபிடி நுசுப்பினர்
 
        206- 216; மணியரி அடக்கிய,,,ஓருபிடி நுசுப்பினர்
 
(பொழிப்புரை) அழகாக இசைக்கின்ற இசையினையுடைய பொற்ச தங்கையும் சிலம்பும் சிறிய அடியினை மறைத்துக்கிடந்து ஆரவாரிக்கவும், இடை ஒசியவும். பரிய கோங்கரும்பனைப் பழித்து விம்மிய இளைய மெல்லிய முலைகளையும் அம் முலைகள் அகப்பட வட்டமும் வளைவும்பட எழுதிய தொய்யில்நிற மழியும்படி முத்துவடத்தோடே கிடந்து புரளும் பிற அணிகலன்களைச் சுமக்கமாட்டாமல் ஒசிந்து வளையாநின்ற ஒருபிடி யளவிற்றாகிய இடையினையும் உடையரும் என்க,
 
(விளக்கம்) 206.  மணிகளைப் பரலாகத் தம்முள் அடக்கிய கிண்கிணி,மாண்வினைப் பகுவாய்க் கிண்கிணி,அணிமிழற்றும் அரவக்கிண்கிணி, அம் பொற் கிண்கிணி,எனத் தனித்தனி கூட்டுக. மாண் வினை  மாட்சிமையுடைய தொழிற்றிறமைந்த பகுவாய் -பிளவுபட்ட வாய். 207. அணி மிழற்று அரவம் - அழகிதாய் ஒலிக்கும் ஓசை என்க. ஈண்டு அணி - இனிமைப்பண்பின் மேற்று. கிண்கிணி - சதங்கை. 209, மருங்குல் - இடை, அடி - அடிப்பகுதி.கொம்மை-பருமை, 212. வட்டவடிவமாகவும் வளைவாகவும் சுண்ணத்தால் எழுதப்பட்.ட தொய்யில் என்க, சுண்ணம்-இஃது ஒன்பதுவகை மணிகளும் பொன்னும் சந்தனமும் கற்பூரமும் புழுகினும் பனிநீரினும் நனையவைத்து இடித்ததொரு பொடி, இலேகை-எழுத்து.ஈண்டுத் தொய்யில், முலைமேல். எழுதப்பட்ட  என்பார் முலை உட்பட விட்ட என்றார். விட்ட-எழுதிவிட்ட என்க, 214 மண்ணிய -கழுவிய. நித்திலவடம்- முத்துவடம். பையென - மெல்லென. 216, ஒருபிடி நுசுப்பு-ஒரு கைப்பிடியினகத்தே அடங்குமளவித்றாகிய இடை.