உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
           கன்னி மகளிர் துன்னுவனர் சூழ
           நான்முகக் கடவுளொடு தாண்முதல் தானம்
           அன்னத் தொழுதியின் மென்மெல வலங்கொண்
     60    டம்மென சாயற் செம்முது பெண்டிர்
           உழுந்துஞ் சாலியும் உப்பு மலரும்
           பசுங்கிளிச் சிறையெனப் பக்கம் நிறைத்த
           பாகுஞ் சாந்தமும் போகமொடு புணர்ந்த
           மங்கல மரபின அங்கையுள் அடக்கிக்
     65    கொழுமுகைச் செவ்விரல் போதெனக் கூப்பி
           எழுமுறை இறைஞ்சுகென் றேத்துவனர் காட்ட
           ஐதேந் தல்குலர் செய்கையிற் றிரியா
           மடைத்தொழில் கழிந்தபி னடைப்பட நாட்டி
 
        57 - 67 ; கன்னி மகளிர்...,..நாட்டி
 
(பொழிப்புரை) பந்தற்கால்கடோறும் நான்முக் கடவுள் முதலிய தெய்வங்கட்கமைந்த இடங்களைச் செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிமகளிர் நெருங்கி அன்னப்பறவையின் கூட்டம் போன்று குழாநிற்ப மென்மெல வலம் வந்து உழுந்தும் நெல்லும் உப்பும் மலரும் வெற்றிலைச் சுருளும் சந்தனமும், ஆகிய நுகர்ச்சிக்கமைந்த மங்கலப் பொருள்களைத் தமது அங்கையில் அடக்கிக் கொண்டு காந்தள் இதழ் போன்ற தம் செவ்விய விரல்களைக் குவிந்ந மொட்டுப்போலக் குவிந்து ''எல்லீரும் இங்ஙனம் ஏழுமுறை வணங்குமின்'' என உழுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டாநிற்ப அக்கன்னி மகளிர் அவ்வணங்குதற் றொழிலில் பிறழாமல் வணங்கித் தெய்வங்கட்கு மடைகொடுத்த பின்னர் என்க
 
(விளக்கம்) முதுபெண்டிர் தம்மைக் கன்னி மகளிர் சூழத் தானும் வலங்கொண்டு கையுள் அடக்கிக் கூப்பி இறைஞ்சுகென்று ஏத்திக் காட்ட அவரும் ஏத்த இங்ஙனமாக மடைத்தொழில் கழிந்த பின்னர் என்றவாறு.
    57. துன்னுவனர்; முற்றெச்சம், துன்னி-நெருங்கி என்க.
    58. நான்முகக் கடவுளோடு பிற தெய்வங்கள் உறையும் தாள் முதல் தானம். தாள்--பந்தர்க்கால் ''ஐயொன்பதின் வகைத் தெய்வம் நிலைஇய கைபுனை வனப்பிற் கான்முதல்'' என்றார்,(17-8) முன்னரும்.
    59. அன்னத்தொழுதி - அன்னப்பறவைக் கூட்டம். இது கன்னி மகளிர் கூட்டத்திற்கு உவமை.
    60 அம்மென் சாயல் செம்முது பெண்டிர் என்றது சுமங்கலியராகிய பேரிளம் பெண்டிரை.
    62. பசுங் கிளிச் சிறை வெற்றிலைச் சுருட்டு உவமை என்க,
    65. முகை என்றது காந்தளரும்பினை, போது-குவிந்த மலர் என்க.
    66. ஏத்துவனர்; முற்றெச்சம்; ஏத்தி என்க, ஐது- மெல்லிதாகிய..
    68, மடைத்தொழில் - தெய்வத்திற்கு மடை கொடுக்கும் தொழில் என்க,