உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
           புண்ணியப் புறநடைப் பண்ணமை இருக்கையன்
           உறுவரை உதயந் துச்சிமுக நோக்கி
     80    அமைதிக்கொப்ப அளந்துகூட் டமைத்த
           சமிதைக் கிரிகை சால்புளி கழிப்பி
           மந்திர விழுநெறித் தந்திரம் பிழையாது
           துடுப்பிற் றோய்த்த சேதா நறுநெய்
           அடுத்த செந்தீ அங்கழல் ஆர்த்திப்
     85    பைம்பொற் கிண்கிணி பாட்டுமிசை ஆர்க்கும்
           செந்தளிர்ச் சீறடி செல்வனம் பற்றிப்
           போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
           ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ
           நன்னெய் தீட்டிய செம்மலர் அங்கைப்
     90    பொம்மல் வெண்பொரி பொலியப் பெய்தபின்
 
        78 - 90; புண்ணியப்புறநடை ......பொலியப் பெய்தபின்
 
(பொழிப்புரை)  கால்களோடே ஒப்பனை பொருந்திய புண்ணிய மணையிடத்தே இருந்த அப் பார்ப்பன முதுமகன் கீழ்த்திசையை நோக்கித் தகுதிக்கேற்ப அளந்து கூட்டி அமைக்கப் பெற்ற சமிதைத் தொழிலை நிறைவுடனே செய்து நூலிற் கூறிய முறை தப்பாதபடி ஓதாநின்ற சிறந்த மந்திர வழிப்படி அகப்பையிற்றோய்த்த ஆன் நெய்யினை வேள்வித் தீயின்கட் பெய்து போகமும் கற்பும் ஒருங்கே கூடி நிலை நிற்பனவாக என்று அச்சடங்கினது குறிப்புப் பொருளைக் கூறிப் பின்னர், உதயணன் கையாலே வாசவதத்தையின் சிற்றடியைப் பற்றுவித்து அம்மியின் மேல் வைப்பித்து நல்ல நெய்பூசப்பட்ட அந்த மணமக்களின் அங்கைகளானே மங்கலப் பொரியினை அவ்வேள்வித்தீ பொலிவுறும்படி பெய்வித்த பின்னர் என்க.
 
(விளக்கம்) நன்னிலையுலகம் என்றது சம்புத் தீவை என்க. நாவல்,
  இது மேருமலையின் பக்கலில் அழிவின்றி நிற்குமொரு மரம் என்ப, இம்
  மரமுண்மையின் இத்தீவு சம்புத்தீவு என்றும் நாவலம் பொழில் என்றும்
  வழங்கப்படுகின்றது. மேருவும் நாவன்மரமும் நீடுழி பிரிவின்றி நிலைத்
  திருப்பது போன்று நிலைத்திடுக என்று வாழ்த்தியபடியாம்.
    91, மிலேச்சர் முதலியோர் வாழ்கின்ற ஏனைத் தீவுகள் போன்றன்றி
  உயிர்கள் அறமுதலிய உறுதிப் பொருளினை உணர்ந்து. தவநெறி நின்று
  வீடு பெறுதற்கிடமாகத் திகழ்தலின் நாவலம் பொழில் நன்னிலையுலகம்
  எனப்பட்டது. 92, பொழில்-நாவலம் பொழில், 94. விளங்கிழை; அன்மொழித்
  தொகை ; வாசவதத்தை என்க. வேட்கும் -திருமண வேள்வி செய்யும்
  (அத்தொழில் முடிந்த பின்னர்) என்க.