உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
         
   120     வெந்திறல் வேந்தன் பைந்தொடி யோடும்
           உத்தர கோணத் தத்தக அமைத்த
           ஏற்றுரி அதன்மிசை ஆற்றுளி இருந்து
           படுசுடர் செக்கர்ப் பசலை தீர
           விடுசுடர் மதியமொடு வெண்மீன் இவர்ந்த
   125     வடபான் மருங்கிற் சுடர்மீக் கூரிய
           கற்புடை விழுமீன் காணக் காட்டிப்
           பொற்றொடி நுதன் மிசைப் புனைவிரல் கூப்பி
           மண்னிய உலகினுள் நின்னியல் பாக
           என்வயின் அருளென மும்முறை இறைஞ்சுவித்து
 
        120 - 129 ; வெந்திறல்வேந்தன்.......இறைஞ்சுவித்து
 
(பொழிப்புரை) பின்னர் வேந்தன் மகளாகிய வாசவதத்தையோடே வடகிழக்கின்கண் அழகு தக்கிருக்க அமைத்த விடைத் தோலிருக்கையின்மீது முறைப்படி வந்து அமர்ந்து ஞாயிறு பட்டுச் செக்கராகிய பசலை தீர்ந்தபின்னர்த் திங்களோடு வென்ளிய நாண்மீன்கள் இயங்காநின்ற வானத்தின் வட பகுதியின்கண் ஒளிமிக்கு விளங்கும் சிறந்த மீனாகிய அருந்ததியினை வாசவதத்தை காணுமாறு காட்டி அவள் தன் நெற்றியின் மேலாகக் கைகளைக் குவித்து நிலைபெற்ற இவ்வுலகிடத்தே யான் நின்னைப்போன்று மாசறு கற்புடையேன் ஆகும்படி அருள்வாய் என்று கூறி மூன்றுமுறை வணங்கும்படி செய்து என்க.
 
(விளக்கம்) 120. வெந்திறல் வேந்தன் என்றது-பிரச்சோதனனை. பைந்தொடி; அன்மொழித் தொகை. வாசவதத்தையோடென்க. 121. உத்தரகோணம் என்றது. வடகிழக்குமூலையை. அ - அழகு. 122. ஏற்றுரி-ஆனேற்றின் தோலாற் செய்ததோர் இருக்கை என்க. ஆற்றுளி - விதிப்படி. 123. வீழ்கின்ற ஞாயிற்றாலே உண்டாகும் செக்கராகிய பசலை என்க, 124, இவர்தல்-இயங்குதல், 126. கற்புடை விழுமீன் என்றது அருந்ததியை. காண்டல் அருமை தோன்றக் காணக் காட்டி என்றார். 128. நின்னியல்பு - நின்னை ஒத்த திண்ணிய கற்புடையேன் ஆகும் தன்மை. இறைஞ்சு வித்து - வணங்கச் செய்து.