உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
         
    130   தெதிர்த்த விரதமொ டியல்பிற் பிழையாது
          சதுர்த்தி இருந்து கதிர்த்த காப்பொடு
          மெய்ம்முதல் திரியாது வேண்டுங் கிரிகையிற்
          கைம்முதற் கேண்மை கழுமிக் கழிந்தபின்
 
        130 - 133 ; எதிர்த்த விரதமொடு...,...கழுமிக் கழிந்தபின்
 
(பொழிப்புரை) பின்னர் அவாவினை எதிர்த்தடக்கி நான்கு நாட்கள் நோற்பதாகிய சதுர்த்தி நோன்பிருந்து பாதுகாவலோடே உடல் முதலிய மூன்று கருவிகளும் தத்தமியல்பிற் பிறழாதவாறு செய்யவேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்து கைப்பற்றுதலாகிய திருமணவிழா முற்றுப்பெற்ற பின்னர் என்க,
 
(விளக்கம்) 130, புதுமணமக்கள் அவாவினை அடக்கி நோற்றல் அருமை என்பது தோன்ற எதிர்த்த விரதம் என்றார்.காமத்துன்பத்தால் உடல் முதலியன மாறுபடாதபடி காப்போடிருந்து என்க, 131.சதுர்த்தி- நான்குநாள்; இது ஆகுபெயராலே நான்கு நாட்கள் நோற்பதொரு நோன்பினைக் குறித்து நின்றது. ஈண்டு விரதம் என்றது மெய்யுறு புணர்ச்சியொழிந்தமைதலை என்க. 'மூன்று இரவின் முயக்கமின்றி ஆன்றோர்க் கமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்தகாலத்து'. என ஆசிரியர் நச்சினார்க்கினியர் வகுத்த (தொல்-கற் சூ.5) நல்லுரையும் நோக்குக. அகநானூற்று உரையாசிரியர்- 'ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்'  எனவரும் 86-ஆம்செய்யுள் வரியில் 'ஓரில்-சதுர்த்தியறை' எனக் கூறுதலும் காண்க.  
    கதிர்த்த காப்பு - கூர்த்த காவல். 132. மெய்முதலிய கருவிகள் என்க. 133,கைம்முதற் கேண்மை என்றது, கைப்பிடித்தலை. 'பாணிக்கிரகணம்' என்பதுமது. கழுமி - நிறைவுற்று.