உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
          மருப்பினும் பொன்னினும் மணியினும் புனைந்த
     135   திருத்தகு திண்கால் திருநிலை பெற்ற
          வெண்பூம் பட்டின் திண்பிணி அமைந்த
          பள்ளிக் கட்டில் வெள்ளிதின் விரிந்த
          கோடுயர் பல்படை சேடுறச் சேர்த்தி
          வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும்
     140   மணியு முத்தும் அணிபெறப் பரப்பி
          அடிநிலை அமைத்து முடிநிலை காறும்
          தாம நாற்றிக் காமங் குயின்ற
          கோலச் செய்கை வாலணிப் பொலிந்த
          எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய
     145   மயிலியன் மாதர் இயல்பிற் படுத்த
          கட்டின்  மீமிசைக் கட்டலர் கமழும்
 
        134 - 146 ; மருப்பினும்பொன்னினும்.......கட்டின் மீமிசை
 
(பொழிப்புரை) யானை மருப்பாற்செய்து பொன்னானும் மணியானும் அணி செய்யப்பட்ட அழகு தக்கிருக்கின்ற திண்ணியகால்களோடே அழகு நிலைபெற்ற வெள்ளிய பூவேலையாற் சிறந்த பட்டினாலே திண்ணிதாகக் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிலின்மேல் வெள்ளிய விளிம்புயர்ந்த விரிந்த பலவாகிய படுக்கைகளை ஒன்றன்மேலொன்றாய் அழகுற அடுக்கி வயிரம் முதலியவற்றை அழகுறப்பரப்பி அடிநிலையை அமைத்து அவ்வடிமுதல் முடிவரையில் மலர்மாலைகளைத் தூக்கி இங்ஙனமாகக் காமப்பண்பினைத் தூண்டுதற்குக் காரணமான ஒப்பனைத்தொழில்களானே, வெள்ளிய அணிகலன்களாலே பொலிவுற்றவரும் எட்டிப்பட்ட முதலிய சிறப்புக்களைப் பெற்ற வரும் மயிலியலோருமாகிய மகளிர்கள் இயற்றிய பள்ளிக்கட்டிலின் மீது என்க
 
(விளக்கம்) 134 மருப்பு- யானைத்தந்தம். பள்ளிகட்டிற்கால்கள் யானை மருப்பாலியற்றுதல், ' தச நான் கெய்திய பணைமருள் நோன்றாள் இகன் மீக்கூறும் ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாகம் ஒழி எயிறு எறிந்து சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளி குயின்ற.... குடத்த' எனவரும் நெடுநல்வாடையானும்(115-21.) அறிக.
    மருப்பாற் செய்து பொன்னானும் மணியானும் புனைந்த என்க.
    138. ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படுதலானே விளிம்புயர்ந்த பல படுக்கைகள் என்க. 'சிறுபூளை, செம்பஞ்சு,வெண்பஞ்சு, சேணம், உறுதூவி என்ற ஐவகைப்படுக்கையினையும் அழகுற அடுக்கி' என்க, 139 வயிரம் முதலியவற்றைப் பரப்பி அடிநிலை அமைத்து என்றது, வயிரமாலை முதலியவற்றைக் கட்டிலின் கீழே வீழ நாலுபுறமும் நாற்றி என்றவாறு. 
    141. முடிமுலை-உச்சி, 142. தாமம் - மலர்மாலை, காமப்பண்பு மிகும் படி குயின்ற கோலச் செய்கை என்க. குயிலுதல் - செய்தல்
    144 எட்டிப்பட்டம், காவிதிப்பட்டம் தாங்கிய மகளிர் என்றது அப் பட்டங்களைப் பெற்ற சான்றோர் மனைவியரை என்க. மகளிர்க்கும் அப்பட்டம் வழங்கும்  வழக்கமும் உண்டெனக் கருதவும் இடமுண்டு.