உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
           குலத்தொடு புணர்ந்த நலத்தகு நண்பின்
      45   அழுக்கா றகன்ற ஒழுக்கா றோம்பிக்
           கைவினை ஐந்துங் கற்றகத் தடக்கி
           மெய்யிற் றூய்மையொடு மேதகு வனப்பிற்
           செயிர்விணை கடிந்துதஞ் சிறப்புவழித் தாங்கி
           மயிர்வினை நுனித்த மாசில் கம்மத்துச்
      50   சிற்பியற் புலவர் நற்கென நாட்டிப்
 
        (43-103. மயிர்வினைக்கல்யாணப் பந்தரின் மாண்பு)
                 44 - 50 ;  குலத்தொடு.......சிற்பியர்
 
(பொழிப்புரை)   நற்குடிப்பிறப்போடே யாவர் மாட்டும் நண்புடைமையும், பொறாமையின்மையும், நல்லொழுக்கத்தைக் கடைப் பிடி.த்தொழுகலும், உடையராய்க் கையாலே செய்யப்படும் ஐந்து வகைச் சிற்பத் தொழிலையும் நன்கு பயின்று உடல் முதலிய மூன்றானும் தூய்மையுடையராய்த் தமக்குரிய சிறப்பு நெறியாகிய சிற்பத் தொழிலையே மேற்கொண்டு மயிர்வினைக் கல்யாணத்திற் குரிய சிற்பத்தொழிலிலே துறைபோகிய சிற்பியர் என்க,
 
(விளக்கம்) 43. குலம்-குடிப்பிறப்பு. நண்பு - யாவர் மாட்டும் அன்புடையராம் பண்பு. 'அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனு நண்பென்னும் நாடாச்சிறப்பு' என்றார் தெய்வப்புலவரும்; (குறள் - 74)
    47. செயிர்வினை கடிந்து தம் மேதகு வனப்பின் சிறப்பு வழி என இயைக்க. சிற்பத்தொழிலைக் கற்றதோடமையாது அத்தொழிலை மேற்கொண்டு செய்வார் என்பார் ''கற்றகத்தடக்கி'' என்றமையாது மேலும் ''தம் சிறப்பு வழித் தாங்கி'' என்றார்.     
    49. மயிர் வினை-மயிர்வினைக் கல்யாணம்.