உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
         
    50    சிற்பியற் புலவர் நற்கென நாட்டிப்
          பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கிப்
          பொருட்சொல் நிரப்பும் புலவர் போலக்
          கல்லும் ஓடும் புல்லுங் கரியும்
          உமியு மயிரும் என்பும் உட்பட
    55    அமைவில் தன்மைய அரித்துடன் களைந்து
 
        50 - 55; புலவர்........களைந்து
 
(பொழிப்புரை) நல்லிசைப் புலவர் செய்யுள் செய்யுங்கால் சொல்லுலகத்தின்கண் பதர்ச் சொல் பருப்பொருட் சொல் முதலியவற்றை ஆராய்ந்து நீக்கிப் பொருட் சொல்லான் மட்டும் அதனை நிரப்புமாறு போலக் கல் ஓடு புல் கரி உமி மயிர் என்பு முதலியனவும் இவை போல்வனவுமாகிய பொருந்தாப் பொருள்களை மண்ணினின்றும் அரித்தகற்றி என்க.
 
(விளக்கம்)  சிற்பப்புலவர், நல்லிசைப்புலவர் பதர்ச்சொல் முதலியவற்றை நீக்குமாறுபோலக் கல் முதலியவற்றை அரித்துக்களைந்து என்க.
    50. நற்கென - கண்டோர் நன்றென்று கூறிப் புகழாநிற்ப. நாட்டி-இடம் வரைந்து என்க. 51. பதர்ச்சொல்-பொருளற்ற வறுஞ்சொல், பருப்பொருள்-நுண்பொருளன்றி எண்பொருள்.
    55. அமைவில் தன்மைய - பொருந்தாத தீய தன்மையுடைய பொருள்.