உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          விண்மேம் படூஉம் விழுத்தக வுடைத்தாய்
         மண்மேம் படுத்து மணிநிழல் உறீஇ
         வடக்குங் குணக்கும் வகையுளிப் பணித்துக்
         குடக்குந் தெற்குங் கோணம் உயரி
   60     நிரப்பங் கொளீஇ நின்ற நிலமிசை
 
         56 - 60: விண்மேம் படூஉம்..........நிலமிசை
 
(பொழிப்புரை)  வானம்போல மேம்படுகின்ற சிறப்புத் தன்மையுடையதாகும்படி நிலத்தைத் தூய்மைசெய்து, அழகிய நிழல் உறும்படி பந்தரை வேய்ந்து, அந் நிலத்தின் வடதிசையினையும் கீழ்த்திசையினையும் முறைப்படி தாழ்த்து, மேற்றிசையினையும் தென்றிசையினையும் அவற்றிடைப்பட்ட கோணத்திசையினையும் உயர்த்துப் பின்னர் மேடும் பள்ளமுமின்றி நிரவி இங்ஙனம் பண்படுத்தப்பட்டு நின்ற நிலத்தின்மேல் என்க.
 
(விளக்கம்) 56. விண்மேம்படும்-வானம்போல மேம்படுகின்ற விழுத்தகவு -சிறந்த தன்மை.  57 மேம்படுத்து-தூய்மைசெய்து உறீஇ - உறச்செய்து, 58. குணக்கு - கிழக்கு. பணிந்து - தாழ்த்து. 59. குடக்கு - மேற்கு. கோணமும் எனற்பால உம்மை  தொக்கது, கோணம்-ஈண்டுத் தென்மேற்றிசை. உயரி - உயர்த்து, 60. நிரப்பம் - நிரவல், அஃதாவது, மேடுபள்ளமின்றிச் செய்தல்.