உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          தொல்லோர் வகுத்தநூல் துறைமுறை போகிய
          நல்லா சிரியர் நடுவுநிலை அமைத்துக்
          கீழ்த்திசை முதலா வாழ்த்துபு வணங்கித்
          தெய்வம் பேணிக் கைவினைக் கம்மத்துச்
    75    சத்தி முகமே சக்கர வட்டம்
          பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
          குஞ்சர முகமே நந்தி மலரவை
          எஞ்சாத் திருவடி வெனப்பெய ரிவற்றுள்
          போரடு மன்னர்க்குப் புரையோர் புகழ்ந்த
    80    பாசடைத் தாமரைத் தாதகத் துறையும்
          மாசின் மடமகள் மருங்கின் வடிவாய்க்
 
        71 - 82 ; தொல்லோர்,,.,.,கோணத்து
 
(பொழிப்புரை) பண்டைச் சான்றோர் வகுத்த நூல்களைப் பயின்று முதிர்ந்த நல்லாசிரியன்மாராலே நடுவிடம் வரையறை செய்வித்துக் கீழ்த்திசை முதலாகத் திசைத் தெய்வங்களை வாழ்த்தி வணங்கி, ஏனைத்தெய்வங்களையும் வழிபட்டுக் கலைத் தொழிற்றிறத்தாலே சத்திமுகம் முதலாகத் திருவடிவு ஈறாகக் கூறப்பட்ட வடிவங்களில் வைத்துத் திருவடிவு எனப்பட்ட  திருமகள் இடைவடிவிற்றாய் இயற்றப்பட்டு வளைந்துகிடந்த கோணத்தின்மேல் என்க..
 
(விளக்கம்) 73. கீழ்த்திசை முதலாகவுள்ள திசைத் தெய்வங்களை வாழ்த்தி வணங்கி என்க, அவராவார் இந்திரன் முதலியோர்.
    74, தெய்வம் - நாற்பத்தைந்துவகைத் தெய்வமும் பிறவும் என்க. கைவினைக் கம்மம்-சிறந்த கைத்தொழிலாகிய சிற்பத்தொழில் என்க.
    75, சத்திமுகம்  முதலியன அம் மங்கலச் சடங்கு நிகழ்த்துதற்க்குரிய இடத்திலியற்றும் உருவ வேறுபாடுகள் என்க.
    76. திருவடிவு - திருமகளின் உருவம்.
    77. நந்திமலர் - நந்தியாவட்ட மலர்.
    78. எனப் பெயர் கூறப்பட்ட இவற்றுள்ளே என்க.
    79 - 81. புரையோர்- உயர்ந்தோர். மன்னர் மரபினர்க்குரிய வடிவம் இஃதென உயர்ந்தோராற் புகழப்பட்ட மருங்குல் வடிவு என்க என்றது திருவடிவு என்பதனை.  
    80. பாசடை - பசிய இலையையுடைய,
    81. மாசின் மடமகள் - திருமகள்
    82. குலாஅய் - வளைந்து. கோணம்-வளைந்த இடத்திற்கு ஆகுபெயர்.