உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          பொதியிற் சந்தனம் போழ்ந்துகொண் டியற்றிக்
         கதிரொளி பயின்ற கம்மக் கைவினை
         நாற்கால் அமைத்த பாற்பெரும் படுமனைப்
         பொங்குமயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ
   100   நண்ணிய சிறப்பொடு நாற்பெருந் திசையும்
         பண்ணிய உணவின் திண்ணிலைக் குப்பையுள்
         முடிமுதற் குத்தி அடுநிலைக் கமைந்த
         பைம்பொன் விளக்கிற் செஞ்சுடர் மாட்டிக்
 
        96 - 103 ; பொதியில்.......மாட்டி
 
(பொழிப்புரை) பொதியிலின்கண் வளர்ந்த சந்தனமரத்தினை ஈர்ந்து செய்த ஒளிமிக்க சித்திரத் தொழிலமைந்த நான்கு கால்களமைக்கப்பட்ட பெரிய மணைப்பலகையினை மயிர்த்தவிசிட்டு அமைத்து மலரால் அணிசெய்து சிறப்போடே திகழாநின்ற நான்கு பெருந்திசைகளினும். குவிக்கப்பட்ட பண்ணிகாரக் குவியலின் உச்சியிடத்தே நடப்பட்ட பாதத்திற்குப் பொருந்திய பொன்விளக்கினைத் தீக்கொளுவி அமைத்தென்க.
 
(விளக்கம்) 96, பொதியிலின் வளர்கின்ற சந்தனமரம் சிறப்புடையதென்ப. சந்தனம்-சந்தன மரம் போழ்ந்து- ஈர்ந்து.
    97 கம்மக்கைவினை .-சித்திரவினை.
    98. பால் -கூறுபாடு. மணை - மங்கல விருக்கை.
    99. மயிர்த்தவிசு - மயிராற் செய்ததோர் இருக்கை, அதனை அம்மணை மேற்படுத்து என்றவாறு.
    100 புனைஇ-புனைந்து புனைந்தமையாலே நண்ணிய சிறப்பு என்க. பெருந்திசை -கிழக்குத் தெற்கு மேற்கு வடக்கு என்பன.
    101, பண்ணியம்- பண்ணிகாரம், குப்பை-குவியல்,
    102. பண்ணிகாரக்குவியலின் உச்சியில் தகளியை அழுத்தி அத்தகளிக்கேற்ற பொன்விளக்கினை எற்றிவைத்தென்பது கருத்து.