உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          நாணுக்கவின் கொண்ட நனிநா கரிகத்
          தியாணர்ப் பூந்துகில் அணிந்த அல்குல்
          இலைப்பூண் கவைஇ முலைப்புறம் புதைஇப்
     120  பொற்கொடி இழையொடு நற்குடன் தாழ
          ஏகவுத் தரியம் இடைச்சுவல் வருத்த
          வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு
          பட்டுத்சுமந் தசைந்த பரவை அல்குல்
          இயைந்தணி பெற்ற ஏன்ற அவ்வயிற்
    125   றசைந்தணி கொண்ட அம்மென் சாயல்
          தாமரை எள்ளிய காமரு திருமுகத்
          தின்பக் காமன் எய்கணை போலச்
          செங்கடை போழ்ந்த சிதரரி மழைக்கண்
          வண்ணக் கோதை வாசவ தத்தையைச்
    130   செண்ணக் காஞ்சனை செவ்விதின் தழீஇ
          இகல்வரை மார்பற் கியைய இரீஇயபின்
 
        ( உதயணன் பக்கலிலே வாசவதத்தையை இருத்துதல் )
            117 - 131 ; நாணுக்கவின்.......இரீஇயபின்
 
(பொழிப்புரை) நாணுடைமையானே எய்திய அழகினையுடைத்தாகிய சிறந்த நாகரித்தினையும், துகிலணியப்பட்ட இடையினையும், முலையினை அகத்திட்டு மறைத்துப் பொன்னாலியன்ற நெடிய அணிகலன்களோடே நன்றாகத் தூங்காநின்ற இலைத் தொழிலாற் சிறந்த அணிகலன்களையும், இடையினையும் பிடரினையும் வருத்தா நின்ற மேலாடையினையும் வட்டாடையின்மேலே அணியப்பட்டுப் பொலிவுறாநின்ற காஞ்சியோடே பட்டாடையினைச் சுமந்திளைத்த பரப்புடைய அல்குலினையும், தனக்குப் பொருந்திய அணிகலன் அணியப்பெற்ற அழகிய வயிற்றினையும் காண்போர்க்குக் கட்புலனாய்த் தவழாநின்ற அழகிய மென் சாயலினையும், தாமரையைப் பழித்த அழகுடைய விரும்புதற்குக் காரணமான முகத்தினையும், காமனுடைய அம்பு போன்று கடையிடத்தை ஈர்ந்த செவ்வரி கருவரி பரந்த குளிர்ந்த கண்களையும், நிறமிக்க மாலை யினையும், உடைய வாசவதத்தையினைக் காஞ்சனை என்பாள் செவ்விதாகத் தழுவி அழைத்துவந்து, மலையுடன் மாறுபட்ட மார்பையுடைய உதயணகுமரனுக்குப் பொருந்தும்படி இருத்திய பின்னர் என்க,
 
(விளக்கம்) 117. நாணுக்கவின் - நாணமுடைமையாலே மெய்ப்பாடாகத் தோன்றுவதோர் அழகு. இவ்வழகு நாகரிகமுடையார்க்கன்றி இல்லை ஆகலின் - நாணுக்கவின் கொண்ட நாகரிகம் என்றார்.
    118. யாணர்ப் பூந்துகில் அணிந்த அல்குல் என்றது எப்பொழுதும் புதிது புதிதாகப் பூ வேலை செய்யப்பட்ட துகிலை அணிந்த அல்குல் என்க, அல்குல் - ஈண்டு இடையின் பின்புறம் என்க.
    119, இலைப்பூண் - இலைத்தொழிலாற் சிறப்புற்ற அணிகலன். முலை கவைஇ புறம்புதைஇ என மாறுக. கவைஇ -அகத்திட்டு, புதைஇ - மறைத்து
    120 . பொற்கொடி இழை - பொன்னாலியற்றிய நீண்ட அணிகலன். நற்கு-நன்கு. 121. ஏக வுத்தரியம்-ஒப்பற்ற மேலாடை,
    121, இடையையும் சுவலையும் வருத்த என்க. சுவர் - பிடர்.
    122. வட்டுடை-முழந்தாளளவாக உடுப்பதோர் ஆடை. ஈண்டு உள்ளாடையைக் குறித்து நின்றது. கலாபம் பதினாறுகோவை மணிவடம்.
    124. இயைந்தணி -இயைந்த அணி என்க. ஏன்ற - இயன்ற. அ - அழகு.
    127. இன்பத்தித்குற் காரணமான காமன் என்க,
    130. செண்ணம்- ஒப்பனை,
    131, வரை இகல் மார்பன் என்க. இரீஇய - இருத்திய,