உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          மின்வாள் அழித்த மேதகு கைவினைப்
          பொன்வாள் பற்றிப் பன்மாண் பொலிகென
          வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி
          இலக்கணம் பிழையா எஃகமை இருப்பின்
    165    நீரளந் தூட்டிய நிறையமை வாளினைப்
          பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி நீக்கிப்
          பைங்கதிர் அவிர்மதிப் பாகத் தன்ன
          அங்கேழ்க் கன்மிசை அறிந்துவாய் தீட்டி
          வெங்கேழ்த் துகின்மிசை விதியுளி் புரட்டிச்
    170    செங்கேழ்க் கையிற் சிறந்துபா ராட்டி
          ஆசறு நறுநீர் பூசனை கொளீஇ
 
        ( 161 - 182 ; மயிர்வினைஞன் மாண்பு )
     161 - 171 ; மின்வாள் அழித்த,,,,.,,,,பூசனை கொளீஇ
 
(பொழிப்புரை) (178) மிக்க நலம்உடையனாகிய நாவிதன் மின்னலின் ஒளிய மழுங்கச்செய்யும் ஒளியுடைய மயிர்க்கத்தியைக் கையிலெடுத்து 'வேந்தன் பலகாலும் பொலிக!' என்று வாழ்த்தி உதயணகுமரனின் சென்னியின் வலப்பக்கத்தைத் தீண்டிப் பின்னர் எஃகும் இரும்பும் சம நீர்மையாக வைத்து இலக்கணம் பிழையாதபடி இயற்றப்பட்ட அம்மயிர்க்கத்தியைப் பட்டும் பருத்தியுங்கலந்து நெய்ததொரு துணியினாலே துருவையும் கிழிப்பினையும் போக்கி எண்ணள் திங்களை ஒத்த சாணைக் கல்லிலே விழிப்புடன் தீட்டி வெள்ளிய துகிலின்மேல் முறையாகப் புரட்டிப் பின் தனது செவ்விய கையினும் புரட்.டி அதற்குப் புண்ணிய நீரானே பூசனை செய்து என்க.
 
(விளக்கம்) 161. மேதகு கைவினைப் பொன்வாள்-மேன்மை தக்கிருக்கின்ற கைத் தொழிற்றிறமைந்த பொன்வாள் என்க. பொன்வாள் என்றது மயிர்க்கத்தியை.
    162. பன்மாண் - பலகாலும். 163, சென்னியின் வலப்பால் என்க. தீட்டி - தீண்டி,
    164 - 165. எஃகும் இரும்பும் நிறைசமமாக அமையுந்தன்மையவாக அளந்து உருக்கிச் செய்யப்பட்ட இலக்கணம் பிழையாத அவ்வாளினை என்க.
    166, பஞ்சும் பட்டும் கலந்து நெய்த கிழியாளே என்க.
    167. பசிய ஒளி வீசித்திகழும் அரைத்திங்களின் உருவிற்றாகியகல் என்க. என்றது சாணைக்கல்லை.
    168. அங்கேழ்க்கல்- அழகிய நிறமமைந்த கல். அறிந்து என்றது - விழிப்புடன் என்றவாறு
    169. வெங்கேழ்த்துகில் - விரும்புதற்குக் காரணமான நன்னிறமுடைய துகில்.
    170, சிறப்பப் பாராட்டி என்க. பாராட்டுதல். கூர்ந்து நோக்கி நன்றென மதித்தல், கையிற் புரட்டிப் பாராட்டி என்க.
    170. நாவிதனுடைய கையின்-.நன்மை கூறுவார் செங்கேழ்க் கையில் என்றார்.
    171. ஆசறு நறுநீர் என்றது அந்தணரானே மந்திர மோதித் தூய்மைசெய்யப்பட்ட புண்ணியநீர் என்றவாறு, கொளீஇக் கொள்வித்து; கொடுத்து என்றபடியாம்.