உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          வாட்டொழிற் கம்மம் வல்லிதிற் பிழையாது
          சேட்டெழிற் பொலிந்த திருமுகக் கேற்ப
          மூரிக் கொள்ளான் முனிதல் செல்லான்
    175    ஆவிக் கொள்ளான் அயர்ந்தும் பிறர்நோக்கான்
          சீர்கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான்
          கண்ணினு மனத்தினுங் கையினு மமைத்த
          மண்ணுவினை மயிர்த்தொழில் நன்னல நாவிதன்
          எல்லை வகுப்ப, , . , . . . . , , , , , , , , , . ,
    180    எதிர்நோக் காற்றா இலங்கிழை முகத்தையும்
          மதிமாசு கழீஇய வண்ணம் போலக்
          கதிர்மேல் இலங்கக் கைவினை முடித்தபின்
 
        172 - 182 ; வாட்டொழில்....,,முடித்தபின்
 
(பொழிப்புரை) கத்தியினாலே செய்யாநின்ற மயிர்வினையின் கண் பிழைப்பின்றி வன்மையோடே பேரழகானே பொலிவுற்ற முகத்தியல்பினுக்குப் பொருந்தும்படியாக, மூரிகொள்ளாதவனாய், விரைதல் இலனாய்க் கொட்டாவி கொள்ளானாய். மறந்தும் அயலாரை நோத்காதவனாய், அழகுபொருந்திய. நெடுந்தகையின் குறிப்பினின்றும் பிறழாதவனாய்க் கண்ணானும் மனத்தானும் கையானும் செய்தமைத்த தொழிலிண் முடிவினை வகுத்த (பின்னர்)........ பிறரை எஞ்ஞான்றும் எதிர்த்து நோக்குதல் செய்யாத வாசவதத்தையின் முகத்தினையும் (புருவமொதுக்கு மாற்றானே) திங்கள் மண்டிலத்தின் களங்கத்தினை அகற்றினாற் போல இயற்கையினமைந்த ஒளி மேலும் நன்கு விளங்கும்படி தன் தொழிலைச் செய்து முடித்த பின்னர் என்க.
 
(விளக்கம்) 172. வாட்டொழிற் கம்மம் என்றது நாவிதன் தொழிலை.
    173. சேட்டெழில் - பேரழகு, திருமுகக்கு - திருமுகத்திற்கு ; சாரியை பெறாது உருபு புணர்ந்தது.
    174. மூரி-திமிர்ப்பு ஆவி-கொட்டாவி. அயர்ந்தும் - மறந்தும்
    176 சீர் -அழகு. நெடுந்தகை ; உதயணன். செவ்வி - குறிப்பு.
    177 கண் முதலிய மூன்று  கருவிகளானும் செய்தமைத்த மயிர்த்தொழில் என்க.
    178. மண்ணுவினை - பண்ணும் தொழில்.
    179, எல்லை - முடிவு. 190. இலங்கிழை; வாசவதத்தை இங்ஙனம் மணமகட்கு மயிர் வினைச் சடங்கியற்றும் வழக்கத்தை,
   'அகிலின் ஆவி தேக்கிடுங்  குழலி னாளை நோக்கலன், நுனித்து நொய்தா இடக்கவுள் உறுத்தி னானே 'என வரும் சீவகசிந்தாமணியானும் (2495) உணர்க.