உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
         மன்பெருஞ் சுற்றமும் வம்ப மாந்தரும்
         நிலையிடம் பெறாஅர் நெருங்குபு செற்றித்
         தலையிட மருங்கின் தமனியத் தண்குடம்
   10    ஆயிரத் தோரெட் டணிமலர் வாய
         முத்துத் தாமமொடு பொற்புரி அணிந்து
         வித்தகர் புனைந்த சித்திர நெடுங்குடை
         எண்ணறுங் கோலமொடு கண்ணுறக் கவிப்பக்
         காரிகை வனப்பிற் கன்னி மகளிர்
   15     சீர்கெழு மெல்விரல் செறியப் பற்றி
         இடுமணி யானை இரும்புறத் திருப்பப்
 
        6 - 16 ;  ஐம்பெருங் குழுவும்,,,,.,,,,,.இரும்புறத் திருப்ப
 
(பொழிப்புரை) ஐம்பெருங்குழுவினர்முதலியோர்நிற்றற்கும் இடம்பெறாதாராய் மிகவும் நெருங்காநிற்பவும் பேரழகுவாய்ந்த கன்னி மகளிர் அழகிய அலர்ந்த தாமரை மலரின் வடிவுபடச் செய்த வாயினையுடையவாகிய ஆயிரத்தெட்டுத் தண்ணிய பொற் குடங்களைத் தமது அழகிய மெல்விரலானே தலையிடத்தே பற்றிக்கொண்டு யானையின் கரிய முதுகின்கண்ணே வீற்றிருப்பவும், வித்தகரானே முத்துமாலை முதலியன அணிந்து இயற்றப் பட்ட சித்திரத் தொழிலையுடைய நெடிய குடைகள் கருதுதற்கரிய ஒப்பனைகளோடே கண்ணுக்குப் பொருந்த நிழற்றாநிற்பவும,் என்க.
 
(விளக்கம்) 6. ஐம்பெருங்குழு; அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் ஒற்றர் எனுமிவர். என்னை,"அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாத்தொழில் தூதுவர் சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப்படுமே" (சிலப், 5;157 -60, அடியார்-உரை மேற்.)என்பவாதலின் -எண் பேராயம்; கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றம் கடைகாப் பாளர் நகரமாந்தர் நளிபடைத் தலைவர் யானை வீரர் இவுளி மறவர் என்னுமிவர்.
     இனி, ''சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய்
          ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்- வேந்தர்க்கு
          மாசனம்பார்ப் பார்மருத்தர் வானிமித்த ரோடமைச்சர்
          ஆசி லவைக்களத்தார் ஐந்து''
எனக் காட்டுவாரும் உளர்.   
    7. மன்பெருஞ் சுற்றம் - அரசனுடைய உறவினர்-வம்பமாந்தர். புதியவராக வந்த மாந்தர். வம்பு - புதுமை.
    8, நெருங்கு செற்றி - மிகவும் நெருங்கி என்க; ஒருபொருட் பன்மொழி. செற்றி என்னும் எச்சத்தைச் செற்ற எனத் திரித்துக் கொள்க.
    9, (கரு). மெல்விரலானே தலையிடமருங்கிற் செறியப்பற்றி  என இயைத்துக் கொள்க, தலையிட மருங்கு - குடத்தின் றலையின்கண் என்றவாறு. தமனியம்-பொன்,
    10. பூவிற்குத் தாமரையே என்பவாகலின் அணிமலர் என்பது தாமரைமலர் என்றாயிற்று. தாமரைமலர் போன்றியற்றப் பட்ட  வாயையுடையனவாகிய ஆயிரத்தெட்டுக் குடம் என்க.
    14. காரிகை வனப்பு; ஒருபொருட்பன்மொழி; பேரழகென்க.
    16, இடுமணி-இட்ட (கட்டிய) மணி. இரும்புறம்-கரிய முதுகு.