உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           மருப்புநிலைக் கந்தின் இருப்பெழுப் போக்கி
           வயவர் காக்கும் வாயிற் செல்வமொடு
     40    கயவர் துன்னாக் கட்டிற் றாகிப்
           படையமை இட்டிகைப் படாமைப் படுகால்
           இடமமைத் தியற்றிய ஏந்துநிலைக் கோணத்துக்
           கழறுகால் அமைத்த கட்கின் வாவியுள்
 
        (மங்கல நீர்க் குளத்தின் மாண்பு)
         38 - 43 ;  மருப்புநிலைக்,,,,.,,,வாவியுள்
 
(பொழிப்புரை) யானை மருப்பினாலே தூண் இயற்றி அத்தூணின்கண் இரும்பினாலே ஏழுமரங்களமைத்து மறவராலே காக்கப்படுகின்ற வாயிலையுடைத்தாய்க் கயவர்கள் எஞ்ஞான்றும் அணுகவியலாத காவலையுடைத்தாய்ச் செங்கல் படுக்கப்பட்ட படித்துறைகள் இயற்றி உயர்ந்த நிலைகனையுடைய அவற்றின் கோணங்ளிலே இடிந்துரை பொறித்த கம்பங்களையுடைத்தாய்க் காண்போர் கண்ணுக்கினிய அழகிய குளத்தின்கண் என்க.
 
(விளக்கம்) 38. மருப்பு- யானையின் எயிறு, கந்து.- தூண், எழு-தடைமரம். அகத்தே நுழையுங்காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. 'சீப்புள்ளுறுத்துத் திண்ணெழுப்  போக்கி ' என்றார் (1-43: 193.) உஞ்சைக்காண்டத்தும், 'எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்' என்றார் இளங்கோவடிகளாரும். (சிலப். 15;215.)
    39, வாயிற் செல்வம்-வாயிலாகிய செல்வம் என்க. அக்குளத்தின் நலத்திற் கேதுவாதல் பற்றிச் செல்வம் எனப்பட்ட.து.
    40. கயவர்-நன்மை தீமை வகுத்துணராது வேண்டியாங்கு. வேண்டியாங் கொழுகும் கீழ்மக்கள்.துன்னா-அணுகாத, கட்டிற்று-   காவலையுடையது.
    41. படை-அடுக்கு. இட்டிகை-செங்கல். பாடு-தளம்படுத்தல். படுகாலிடம் - படித்துறையிடம். கோணம்-அப்படித்துறை,   மூலைகளில்.
    43. கழறுகால்-இக்குளத்தின் நீரை மசுப்படுத்துவோர் இத்தண்டனை எய்துவர் என்றாற்போன்ற இடித்துரைகளாலே அச்சுறுத்து மொழிகள் பொறித்து நிறுத்தப்பட்ட தூண்கள் என்க.
    'காப்புற வகுத்த கன்னியங் கடிமனை யாப்புற வகுத்த போர்ப்பெருங்கோணத்துக் கழறுகால் அமைத்து' என்றார் உஞ்சைக்   காண்டத்தும் (1 - 41, 266 - 268,)
    43. கட்கின் வாவி-கண்ணுக்கு இனிய குளம்.