உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           நிழல்திகழ் தெண்ணீர் நீலஞ் சூழப்
     45    பறவைத் தொழுதிப் பக்கம் நீக்கி
           நிறைய முகந்து முறைமையின் ஏந்தி
           ஐஞ்ஞூற் றிரட்டி அணியிதழ்த் தாமரைச்
           செந்நீர் போதொடு செறிய வீக்கிப்
           பூஞ்சுமட் டிரீஇப் போற்றுவனர் தந்த
     50    தேங்கமழ் நறுநீர் திறவதின் பற்றிப்
 
        (44-64. மங்கலநீர் எடுத்து வருதல்)
          44 - 50 ;  நிழல்திகழ்,,.,,,,,நறுநீர்
 
(பொழிப்புரை) நீல நிறம் மிகாநிற்ப நிழலிட்டு விளங்கும். தெளிந்த நீரினைப் பறவையினங்கள் மேலே பறவாமல் அகற்றிப்பாதுகாத்து மகளிர் அப்பொற்குடங்கள் நிறையும்படி முகந்து ஏந்தி ஆயிரமி தழமைந்த செந்தாமரை மலர்களானே மூடி அவற்றின் தண்டுகளானே இறுகக்கட்டிப் பூவாலாகிய சுமையடையின் மிசை இருத்திப் பாதுகாத்துக் கொணர்ந்து தந்த தேன்மணங்கமழாநின்ற அந்நறிய நீர்க்குடங்களை, (பற்றி என்க.)
 
(விளக்கம்) 44. நீலஞ்சூழநிழல்திகழ் தெண்ணீரை என மாறுக, நீர்நிலை ஆழ்ந்திருப்பின் நீர் நீலநிறமாகத் தோன்றுதல் இயல்பு, நீலஞ் சூழ என்றது நீலநிறம் மிக்குத்தோன்ற என்றவாறு. நிழல்-பொருள்களின் எதிருருவம்; (பிரதிபிம்பம்.) இது தெளிவுடைமைக்கு அடை. நிழலிட்டு விளங்கும்படி தெளிந்தநீர் என்க.
    45. தொழுதி - கூட்டம். பறவைகள் நீர்க்கு -மேலாய்ப்  பறந்து நீரினை மலமுதலியவற்றால் மாசுபடுத்தாமைப் பொருட்டுப்   பறவைக் கூட்டத்தை நீக்கி என்பது கருத்து.
    47. செந்நீர்ப்போது -சிவந்த நிறமுடைய மலர்,
    49. பூஞ்சுமடு-பூவாற்செய்த சுமையடை(சும்மாடு,) போற்றுவனர்-பேணுபவராய்; முற்றெச்சம் - போற்றி என்க.