உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          நின்னோ ரன்ன நீப்பருங் காதல்
         பொன்னணி புலவரொடு செம்மலை யாகிக்
         கொற்றங் கொண்டு கோலினி் தோச்சென
         வெற்ற வெள்வேல் வீரியற் புகழ்ந்து
   75    மடவரன் மாதரை மணம்புரி காதலற்
         கிடவயின் இருத்தல் கடவ தாகலிற்
         றங்கரச் செல்வந் தலைத்தலை தரூஉம்
         மங்கல மணைமிசை வெண்டுகில் புதைஇ
         இருக்கை திருத்திய பின்றைத் திருத்தகு
 
        71 - 79 ;  நின்னோ ரன்ன.,,,.,.,திருத்திய பின்றை
 
(பொழிப்புரை) வெற்றிவேலையுடைய மறவனாகிய உதயணனை நோக்கி, ''நின்னையே அறிவான் ஒத்த நீத்தலில்லாத அன்புடைய் புலவர் பெருமக்களோடே கூடித் தலைமைத்தன்மையுடையையாய் வெற்றிகொண்டு செங்கோன்மை நடத்துவாயாக! " எனப்புகழ்ந்து வாழ்த்தி மணமகளை மணமகனின் இடப். பக்கதே இருத்துவது முறைமையாகலின் மணமகள் அமர்தற்கு வேண்டிய மங்கலமணையினை அவனுக்கு இடப்பக்கத்தே' இட்டு வெண்டுகில் விரித்து இவ்வாறாக இருக்கை அமைத்த பின்னர் என்க.
 
(விளக்கம்) 70. நின்னையே ஒத்த நீப்பருங் காதலையுடைய புலவர் எனினுமாம்.
    71. அரசன் பெறற்கரிய பேறுகள் அனைத்தினும்.தலைசிறந்தது பெரியார் கேண்மையே ஆகலானும், அப்பேறுபெற்றால் ஏனைப்பேறுகள் தாமே வந்து எய்துதல் ஒருதலையாகலானும் நீப்பருங் காதல்  புலவரொடு செம்மலையாகி என்று வாழ்த்தினர் என்க.
    72. பொன்னாலாய சிறப்பணி அணியப்பெற்ற நல்லிசைப் புலவர், என்க, செம்மலை- தலைமைத் தன்மையுடையை.
    73. கொற்றம் - வெற்றி. கோல் ; செங்கோன்மை.
    74. வெற்றம் -வெற்றி. வீரியன் - உதயணன்.
    75. மடவரன் மாதர் என்றது,மணமகள் என்பதுபட நின்றது.
    76. தங்கரச் செல்வம் - தீர்த்தங்கரர்க்குரிய செல்வம் என்னும் பொருளில் வந்து முதல் குறைந்த சொல்போலும்,