உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           இருக்கை திருத்திய பின்றைத் திருத்தரு
     80    மறுவில் தொல்குடி மங்கல மடந்தையர்
           நறுவெண் சாந்தின் நன்னலங் குயிலக்
           கொடிபல எழுதிய கோலத் தோளினர்
           முடிமிசை அணிந்த முல்லையங் கோதைக்
           கொடுங்குழை திளைக்குங் காதினர் கடுங்கதிர்க்
     85    கலாவம் புதைத்த நிலாவெண் துகிலினர்
           நுரைபுரை கலிங்கம் ஒருமுலை புதைப்பத்
           திருக்கொடிச் சாலி செம்பொன் வாகையென்
           றெுருப்படுத் தூழூழ் முறைமையின் ஏந்தி
           நானங் கலந்த நறுநெய் தோய்த்துத்
     90    தானந் தோறுந் தலைமுதல் உறீஇக்  
 
        [79 - 105. மகளிர் வாசவதத்தைக்கு நெய்யேற்றுதல்.]
      79 - 90 ;  திருத்தகு மறுவில்,,,,,..,,,தலைமுதல் உறீஇ
 
(பொழிப்புரை) குற்றமற்ற செல்வமிக்க பழைதாகிய உயர்குடிப் பிறப்பனராகிய மங்கலமகளிர் கோலத் தோளினராய்க் குழைதிளைக்கும் செவியினராய்க் கலாவம் அணிந்தவராய் வெண்டுகில் உடையராய்க் கலிங்கம் ஒருபால் முலையை மறையாநிற்ப நெற்கதிரையும் வாகைத் தளிரையும் சீர்செய்து முறைமுறையாகக் கையின் ஏந்தி நறுமணங் கலந்த நெய்யின்கண் தோய்த்துத் தலைமுதலாக உறுப்புகள்தோறும் ஏற்றி என்க.
 
(விளக்கம்) 79. திரு - செல்வம். திருவாலே தகுதிபெற்ற தொல்குடி என்க.
    80. மறு-குற்றம்; பழி. தொல்குடி-பழங்குடி; தொன்று தொட்டு ஒழுக்கம் பேணிவருதலானே உயர்குடியைப், பழங்குடி என்றார். 'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று' என்புழி வள்ளுவனாரும் உயர்குடியைப் பழங்குடி என்றோதுதல் காண்க.மங்கல மடந்தையர் என்றது சுமங்கலியர் ஆகிய மகளிர் என்றவாறு.
    81. மங்கலச்செயல் செய்தற்பொருட்டு வெண்சாந்தாலே தொய்யில் எழுதப்பட்ட தோளினர் என்க. நன்னலம்-சிறந்த அழகு. குயில-பொருந்தும்படி,
    82. கொடி -கொடியுருவம். 
    83. முல்லையங்கோதை -முல்லைமலர் மாலை. இது கற்புடைமைக்கு அறிகுறியாக அணிந்த படியாம்,
    85கலாவம்-பதினாறுமணிக்கோவையாகிய ஒரணிகலன். சரமணிக்கோவையுமாம். அவ் வணிகலனாலே மறைக்கப்பட்ட துகிலினர் எனக்.
    86. நுரை, நுண்ணிய வெண்டுகிலுக்குவமை.கலிங்கம்-ஆடை.
    87.கொடிச்சாலி-ஒருவகை நெற்பயிர்-ஆகுபெயரால் அதன் கதிர்க்காயிற்று. செம்பொன்போன்ற நிறமுடைய வாகைத்தளிர் என்க.
    88. அம் மகளிருள்ளும் தத்தம் வரிசைக்கேற்ப ஒருவர்பின் ஒருவராய் முறைமையோடே வந்தென்பார், 'ஊழூழ்முறைமையின்' என்றார். ஊழ்-முறைமை,
    89, நானம் - நீராடல்; அஃது ஆகுபெயராய் நீராடற்குரிய நறுமணச் சுண்ணத்தைக் குறித்து நின்றது. 'நலத்தகு நானம் நின்றிடிக்கு நல்லவர் என்புழி அஃது சுண்ணமாதல் அறிக'(சிந்தாமணி. நாமக 93.)
    90 தலைமுதல் தானந்தோறும் என மாறுக. உறீஇ-உறுவித்து; பெய்தென்றவாறு.