உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          செய்த கோலஞ் சிதைய மறலிப்
         பெய்தல் நாடிப் பேதையர் பிணங்கி
         அத்தின் எறிந்து முத்துப் பரிந்திட்டும்
         சித்திர நுண்டுகில் சேர்ந்த அல்குற்
   110    பத்திப் பல்காசு பரிந்தனர் உகுத்தும்
         கோதை பரிந்துங் குடநீர் தூயும்
         மானேர் நோக்கியர்.........,..
         போதுவிரி பொய்கையுட் புக்கனர் புரிந்தும்
         குளித்த மகளிரொடு திளைத்தல் ஆனார்
   115    குடைந்த வெண்ணுரை குடங்கையின் வாரித்
         தடங்கண் சிவப்ப எறிதலின் நடுங்கி
         விம்முவனர் தளர்ந்து மென்மெல ஒதுங்கிக்
         கூந்தல் சோரப் பூந்துகில் அசைஇ
         வேந்தன் மகளொடு விளையாட்டு விரும்பி
   120    வண்ண மகளிரு மைந்தரு மயங்கி
         மண்ணுநீ ராட்டின் மரபுளிக் கழிந்தபின்
 
        (106 - 124 : மகளிரும் மைந்தரும் நீராாட்டு விழவயர்தல்)
       106 - 121 ;  செய்த கோலம்........மரபுளிக் கழிந்தபின்
 
(பொழிப்புரை) இங்ஙனமாக நீராட்டுதல.்நிகழ்ந்துழி மான் போன்ற  விழியுடைய  மகளிர்  தம்முட் பிணங்கி  எதிர்த்து ஒருவரை  ஒருவர்  துவர்நீர்  முதலியவற்றான்  எறிந்தும், முத்துமாலை  முதலியவற்றை அ றுத்து மணிகளைச் சிதறியும், மலர்மாலைகளை அறுத்தும், குடத்துக்கண் நீரை ஒருவர் மேல் ஒருவர் வீசியும்,  குளங்களிலே புகுந்து ஆடுதல்  ஒழியாராய்த் தாம் ஆடுதலானே நீரின்கட்டோன்றிய வெள்ளிய நுரையினைக் கையான் முகந்து விழிசிவப்ப வீசியும், அது பொறாது விம்மியும் தளர்ந்தும் கூந்தல்  சோரவும்  ,துகிலினை  நழுவாது  உடுத்தும் இவ்வாறு மகளிர் வாசவதத்தையோடே மங்கல நீராடுதலை விரும்பி ஆடாநிற்பவும்  ஆடவர்.  உதயணனோடே ஆடுதலை விரும்பி ஆடாநிற்பவும், இங்கனம் மங்கல நீராட்டு  முறைப்படி  நிகழ்ந்து முடிந்தபின்னர் என்க
 
(விளக்கம்) 106.  (112)  மான்நேர் நோக்கியராகிய பேதையர் செய்தகோலம் சிதையும்படி மறலிப்பிணங்கி என இயைத்துக் கொள்க
    107. இங்ஙனமாக நீர்பெய்தலை நாடி என்க. அஃதாவது இங்ஙனம் நீராட்டியவழி  என்றவாறு. 
    108. அத்து - துவர். பரிந்து - அறுத்து.
    109, சித்திரத்தொழில் அமைந்த நுண்ணிய ஆடை. 
    110. பத்திப் பல்காசு - நிரல்படக் கோத்த பலவாகிய பொற்காசு மாலை. பரிந்தனர்; முற்றெச்சம்
    112. மான்நோக்கினை ஒத்த நோக்கத்தையுடைய மகளிர்
    113, புரிந்து புக்குக் குளித்த மகளிரோடு என்க,புரிதல் -விரும்புதல்
    114. திளைத்தல் - ஆடுதல், ஆனா - அமையாத.
    115. குடைந்தமையாலுண்டாய  வெண்ணுரை என்க.  குடைதல்- நீராடுதல்
    117. விம்முவனர்; முற்றெச்சம். விம்முதல் - தேம்புதல். ஒதுங்கி - நடந்து.
    118. அசைஇ - கட்டி.
    119 வேந்தன் மகள்; வாசவதத்தை.
    120 இவ்வண்ணமே மைந்தர் உதயணனோடு விளையாட்டு விரும்பி எனச் சிலசொற் பெய்து கொள்க, மயங்கி - கலந்து.