உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          நன்மணக் கோலத்துக் கைந்நல நுனித்த
   170   அங்கலுழ் பணைத்தோள் மங்கல மகடூஉக்
         கட்டிய கச்சையள் கைவிரல் கூப்பி
         நெட்டிருங் கூந்தல் நீரற வாரிப்
         பன்னுமுறை விரித்துப் பின்னுபு தொகுத்துக்
         கோட்டிடை வளைஇய குஞ்சரத் தடக்கையிற்
   175   சூட்டொடு விரைஇச் சுற்றுபு முடித்துப்
         பத்திப் பலகைப் பரிசரக் கைவினை
         வித்தகப் பத்தி வேறுபட விரித்தவை
         ஒழுக்கமுறை அறிந்து வழக்கிலள் வைத்து
         முடிக்கல முதலா முறைமுறை தோன்றும்
   180   அடிக்கலம் ஈறா அணிந்தழகு பெறீஇ
 
        169 - 180 ; நன்மணக் கோலத்து.............பெறீஇ
 
(பொழிப்புரை) அம்மகளிருள் நன்றாகிய மணக்கோலஞ் செய்தலிலே கைவன்மையுடையவளும் அத் துறையினைக் கூரிதாகக் கற்றவளும், அழகொழுகும் தோளினையுடையவளும், கச்சையணிந்தவளும், சுமங்கலமுடையவளும் ஆகிய ஒருத்தி கைகூப்பித் தொழுது, பின்னர் வாசவதத்தையின் கூந்தலை ஈரம்புலர வாரிப் பன்னுமுறையானே பன்னி விரித்துப் பின்னிச் சேர்த்து மருங்கின்மேல் வளைத்துப் போகட்ட யானையினது பெரிய கையினைப் போலக் கொண்டைப் பூமாலையினை யிட்டு வளையச்சுற்றி முடித்து, பத்தி முதலிய தலைக்கோலங்களை வேறுபட விரித்து ஒழுங்கு படத் தப்பின்றி அணிந்து மேலும் முடிக்கலன் முதல் அடிக்கலன் ஈறாக அணிந்து அழகுசெய்து என்க.
 
(விளக்கம்) 169, கைந்நலம் - ஒப்பனை நன்மை
    170. அம்கலுழ் - அழகொழுகாநின்ற, பணைத்தோள் - மூங்கிலை ஒத்ததோள். மங்கல மகடூஉ - சுமங்கலி. மகடூஉ - மகள்,
    172. நெட்டிருங் கூந்தல் - நெடிய கரிய கூந்தல். வாசவதத்தையின் கூந்தல் என்க.
    173, பன்னுமுறை - வகுக்கும் முறை.  பின்னுபு - பின்னி,
    174. யானைக்கை; பின்னலுக்குவமை, வளை இய - வளைத்ததுப்போகட்ட. 'முத்தார் மருப்பினிடை வளைத்த  முரண்கொள் யானைத் தடக்கையின் ஒத்தேருடைய மல்லிகையின்  ஒலியன் மாலை உறுப்படக்கி வைத்தார்.'' (சீவக. 2693.) என்றார்  திருத்தக்க தேவரும்.
    175. சூட்டு - கொண்டைப்பூமாலை. விரைஇ-  கலந்து. சுற்றுபு - சுற்றி.
    176. பத்திப்பலகை, பத்தி என்பன தலைக்கோலவகைகள்.பரிசாரகர்களாலே செய்யப்படுதலின் ஒப்பனைத்தொழில் பரிசரக் கைவினை எனப்பட்டது. பரிசாரம் -  பணித்தொழில்
    178, வழுக்கு - தப்பு, வழுக்கிலள்; முற்றெச்சம்.
    179. முடிக்கலம் - தலையணிகலன்; (மோலி)
    180. அடிக்கலம் - சிலம்பு முதலியன.