உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          பல்வேறு கொடியும் படாயைுக நிரைஇ
          ஆறுபுகு கடலின் மாறுதிரை மானக்
          கண்ணுற்று நுடங்கிக் காரிருள் கழுமி
          விண்ணுற் றியங்கும் வெய்யோன் அழுங்க
    25    மரீஇய மாந்தரம் மனைகெடுத் துழன்றிது
          பொரீஇக் காணிற் போக பூமிக்(கு)
          இருமடங் கினிதெனப் பெருநகர் உற்ற
          செல்வக் கம்பலை பல்லூழ் நிறைந்து
          மாண்பதி உறையுநர் காண்பது விரும்பி
 
        21 - 29; பல்வேறு. ........,..விரும்பி
 
(பொழிப்புரை)  பலவேறு வகைப்பட்ட கொடியும் பெருங்கொடியும் நிரம்பி ஆறுசென்று புகாநின்ற கடலின்கண் அவ்வாற்று நீரோடு மாறுபட்டுப் பொருது மடங்கும். அலைகளை ஒப்பச் செறிந்து மடங்கவும் அதனாலே கரியஇருள். நிறைந்து வானத்தே இயங்கா நின்ற ஞாயிற்று மண்டிலம் வருந்தா நிற்பவும்,பலகாற் பயின்றடிப்பட்ட மனிதரும் தத்தம் வீட்டினைக்காண மாட்டாராய் உழலா நிற்பவும் காண்போர் இதனோடு ஒப்பிட்டுக் கானுமிடத்து இந்நகரம் துறக்க நாட்டினுங் காட்டில்  இருமடங்கு இனிமையுடைத்தாகும் என்று கூறாநிற்பவும் இவற்றாலுண்டாய இன்ப ஆரவாரம் பல்லாற்றானும் நிறையா நிற்பவும் அச்சயந்தி நகரத்தே வாழும் மாந்தரெல்லாம் உதயணகுமரனின் திருமணக்கோலத்தைக் கண்டு மகிழ்வதனைப் பெரிதும் விரும்பா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) 21. நிறத்தானும் வடிவானும் வேறுவேறான பல வகைக் கொடிகளும் என்க. படாகை பெருங்கொடி - அடையாளக்கொடியுமாம். நிரைஇ-நிரம்பி, நிரல்பட்டெனினுமாம்,
    22, ஆறு புகுமிடத்தே அவ்வாற்று .நீரோடு மாறுபட்டு மோதி நுடங்கும் கடல் அலைகள் போல என்க. மான் ; உவமவுருபு,
    23, கண்ணுற்று-செறிந்து. நுடங்கி-மடங்கி. கழுமி-நிறைந்து. நுடங்கி என்னும் எச்சத்தை நுடங்க எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக
    24. வெய்யோன்-ஞாயிறு. அழுங்க-வருந்த.
    25. மரீஇய-மருவிய - பலகாலும் பயின்றடிப்பட்ட என்க. மனை கெடுத்து-புதுமையானே தத்தம் வீடுகளைத் தாமே அடையாளம் காணமாட்டாராய் என்க.
    26. பொரீஇக் காணில் - ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து. போகபூமி- துறக்கம்
    28. செல்வம் -ஈண்டு இன்பம்; ஆகுபெயர். நிறைந்து (29,) விரும்பி என்னும் எச்சங்களைச் செயவெனெச்ச மாக்குக,