உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         
    30    தன்னின் அன்றியும் தமக்கு வழிவந்த
          குலப்பெருந் தெய்வம் கூப்புத லானும்
          அரிமலர்க் கண்ணியொ டகநாட்டுப் பெயரும்
          கருமக் காலை பெருவரம் பெறுகென
          உள்ளகத் துணர்ந்ததை உண்மை யானும்
    35    சுருக்கம் இன்றி்ச் சுடர்ப்பிறை போலப்
          பெருக்கம் வேண்டிப் பெருநில மன்னவன்
          ஆரணங் காகிய அறிவர் தானத்துப்
          பூரணப் படிமை காண்ட லானும்
          இன்னவை பிறவுந் தன்னிய லாதலின்
 
        30-39; தன்னின் ..............இன்னியலாதலின்
 
(பொழிப்புரை)  (170) பசியமாலையினை அணிந்த  உதயண குமரன் தனக்கே அன்றியும் தனது வழிவழியாகத் தொடர்ந்து வந்த குல முதல்வர்க்கும் தெய்வமாகிய இறைவன் வணங்கப்படுதலானும், தான் வாசவதத்தையோடு உஞ்சை நகரத்தினின்றும் தன்னாட்டகத்தே வந்தபொழுது இனி இறைவனை வழிபட்டுச் சிறந்த வரங்களைப் பெறுதல் வேண்டும் எனத் தன் னெஞ்சகத்தே கருதியதுண்டாகலானும், அரசனாவன் வளர்பிறைபோல வழிவழிப் பெருகவேண்டித் திருக்கோயில் புகுந்து இறைவன் திருவுருவ வழிபாடு செய்தல் மரபாகலானும் இவை போல்வன பிற காரணங்களும் உளவாக, மேலும் இறைவழிபாடு செய்தலின்கண் இன்புறுதல் தன் சிறப்புப் பண்பாகலானும் என்க.
 
(விளக்கம்) 30.. தன்னின்-தனக்கு. தமக்கு என்புழி பன்மை அக்குலத்தோர் பிறரையும் உளப்படுத்துரைத்தவாறு, யான் எம்மூர்புகுவேன் என்றாற் போன்று.   31. கூப்புதலானும்- கூப்பப்படுதலானும்.
    32. அரிமலர்க்கண்ணி - செவ்வரி கருவரி படர்ந்த தாமரை மலர்போன்ற கண்ணையுடைய வாசவதத்தை.அகநாடு - தன்னாடு என்க.
    33, கருதிய காரியம் நிகழா நின்றகாலம் என்பார், கருமக்காலை என்றார் இறைவனை வழிபட்டுப் பெரிய வரங்களைப் பெறக் கடவேன் என்று என்க.
    34, உள்ளகம் - நெஞ்சத்தே.
    35. சுடர்பிறை என்றது - வளர்பிறையை.
    36. பெருநில மன்னவன்-முடிவேந்தன்.
    37, ஆரணங்கு ஆகிய-தெய்வத் தன்மையுடையதாகிய. அறிவர்தானம் - திருக்கோயில்,
    38, பூரணப்படிமை - தெய்வப் பண்பு முழுமை பெற்ற இறைவன் திருவுருவம்.
    39, தன்னியல் - தனது சிறப்புப் பண்பு. இறைவழிபாடு செய்தலின் இன்புறுதல் தன் சிறப்புப் பண்பாகலானும் என்க.