உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         
    40    ஆணப் பைம்பொன் அடித்தொடைப் பலகை
          கோணங் கொண்ட கொளூஉத்திரள் சந்துமிசை
          உறுப்புப் பலதெரிந்த சிறப்பிற் றாகிச்
          செம்பொன் இட்டிகைத் திண்சுவர் அமைத்துக்
          குடமுந் தாமமும் கொழுங்கொடிப் பிணையலும்
    45    அடர்பூம் பாலிகை அடிமுதற் குளீஇப்
          புடைதிரண் டமைந்த போதிகைப் பொற்றூண்
          வேண்டக மருங்கிற் காண்தக நிறீஇ
 
        40-47; ஆணம்......... ,....நிறீஇ
 
(பொழிப்புரை)  பசிய பொற் குழம்பானே வார்க்கப்பட்ட அடிப்படைப் பலகையினையும் மூலைகளைக் கொண்டுள்ள கொளுவிய திரண்ட பொருத்துவாய் தோறும் பல்வேறு உறுப்புக்களும் இயற்றிய சிறப்பினையும் உடைத்தாய்ச் செம்பொன்னாலியன்ற இட்டிகை களானே திண்ணிய சுவரை இயற்றி, குடவுருவமும் மாலையுருவமும் கொடிப் பிணக்க உருவங்களும் செதுக்கப்பட்டனவும் பக்கங்கள் திரண்டு அமைந்த குறுந்தறிகளையுடையனவும் ஆகிய பொற்றூண்களைப் பொன் தகட்டாலாகிய பாலிகைகளைப் புதைத்து அவற்றின் மேலாக வேண்டுமிட மெங்கும் காட்சி இன்பந்தக நிறுத்தி என்க
 
(விளக்கம்) 40- ஆணம்- குழம்பு, குழம்பாக உருக்கப்படும் இயல்புடைய பசும்பொன் என்க. அடித்தொடை - சுவரடிப்பகுதியில் தொடுத்துப் படுக்கப்படும் பலகை. எனவே அடிப்படைப் பலகை என்பதாயிற்று.
    41.கோணங்களைக் கொளுவுதலையுடைய பொருத்துவாய் மிசை என்க..செம்பொன்னால் வார்க்கப்பட்ட இட்டிகை என்க, இட்டிகை-செங்கல்.
    44.குடம்,தாமம்,.கொடிப்பிணையல் என்பன தூண்களிற் செதுக்கியஉருவங்கள்என்க,
    45.பாலிகை-வட்டவடிவமான தகடு, பூம்பாலிக அடர்அடி முதல்குளீஇ என்க. குளீஇ புதைத்து. தூண்கடோறும் அடியில் பொன்னாலாகிய வட்டத் தகடுகளைப் புதைத்து என்பது கருத்து.
    46.போதிகை - ஒரு தூணுறுப்பு ; குறுந்தறி.
    47.வேண்டக மருங்கில்-தூண்கள் நிறுத்தவேண்டுமிடத்திலெல்லாம், காண்தக - காட்சி இன்பமுண்டாக. நிறீஇ-நிறுத்தி,