உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         
    55    பத்திப் பல்வினைச் சித்திரக் குலாவின்
          ஒத்தமைத் தியன்ற சத்திக்கொடி உச்சி
          வித்தக நாசி வேண்டிடத் திரீஇத்
          தூண்மிசைக் கேற்ப ஏண்முள் அழுத்திய
          போதிக் கொத்த சாதிப் பவழக்
    60    கொடுங்காழ்க் கோவைக் கடுங்கதிர்ப் பணித்திரள்
          அவ்வயிற் கேற்றுக் கவ்விதிற் பொலிந்து
          நீல வுண்மணிக் கோலக் குழிசி
          புடைத் துளைக் கேற்ற இடைத்துளை யாப்பின்
          அமைத்துருக் கியற்றிய ஆடகப் பொன்னின்
    65    விசித்திரத் தியற்றிய வித்தக வேயுள்
 
        55 - 65 ; பத்தி.....,......வேயுள்
 
(பொழிப்புரை)  பத்தியாக அமைக்கப்பட்ட சித்திரவளைவு களையும் ஒன்றற்கொன்று ஒத்ததாக அமைக்கப்பட்ட கொடிக்குழிகளையும் உடைத்தாய் நாசி என்னும் உறுப்புக் களை வேண்டுமிடமெல்லாம் இருத்தித் தூணின் உச்சிக் கேற்ப வலிய இருப்பு முட்கள் பதிக்கப்பட்ட போதியினையும் அப் போதிக்குத் தகுந்த வளைந்த பவழத்தாற் செய்த மாலை களாலாய மிக்க ஒளியையுடைய மணிக்கோவைத் திரள்களை அவ்வவ்விடத்தில் ஏற்பித்துப் பொருத்தமாகப் பொலியாநின்ற நீலமணிகளாற்  செய்த அழகிய குட உருவங்களையும் (கலசங் களையும்) பக்கத்துளைகளையும் அவற்றிற் கேற்ற இடைத்துளை களையும் இட்டு யாத்தலமைந்த பொற்றகடுகளாலே விசித்திரமாக வேயப்பட்ட மேற்பரப்பினையும் என்க.
 
(விளக்கம்) 55. பத்தி- வரிசை, வரிசைவரிசையாக அமைக்கப் பட்ட பல்வேறு வேலைப்பாடமைந்த சித்திரங்களையுடைய வளைவுகளையும் என்க.
    56 சத்தி-.கொடி நடுங்குழி.
    57. நாசி-ஓர் உறுப்பு மூக்குப் போறலால் அப்பெயர் பெற்றது 
    57 ஏண்முள் -வலிய இருப்புமுள்.
    58. போதி-ஓர் உறுப்பு. சாதிப் பவழம்- உயர்ந்த பவழம் இதனை நற்பவழம் என்ப.
    59 - 61. நற்பவழத்தால் இயற்றிய வளைந்த கோவை வடங்க களாற் கட்டப்பட்ட கடிய ஒளியையுடைய மணிக்குஞ்சங்களை அவ்வவ்விடத்தே ஏற்பித்துப் பொலிந்த குழிசி என்க. 
    61. பொலிந்து- பொலிந்த என்க.
    62. நீலநிறமுடைய கண்டோர் நெஞ்சையுன்னும் மணி என்க. குழிசி - குடம் (கலசம்)..
    62. ஆடகப் பொன் - நால்வகைப் பொன்னில் ஒன்று,
    65. விசித்திரத்து -அதிசயத்தோடு. வித்தகம்-தொழிற் சதுரப் பாடமைந்த. வேயுள் - மேற்பரப்பு.