உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          தீஞ்சுவை நெல்லி்த் திரள்காய்த் தாரையுள்
          கூப்புபு பிணித்த கூடப் பரப்பிற்
          கட்டளை அமைத்துக் கட்கினி தாகி
          எட்டுவகைப் பெருஞ்சிறப் பேற்ப எழுதி
    70    ஒட்டிய வனப்பினோர் ஓட வுத்தரத்
          தொண்மணிப் புதவிற் றிண்ணிதிற் கோத்த
          பொறிநிலை அமைந்த செறிநிலைப் பலகை
          வள்ளி யும் பத்தியும் உள்விரித் தெழுதி
          ஒள்ளொளி திகழும் வெள்ளிக் கதவின்
    75    பக்கம் வளைஇய நித்திலத் தாமம்
          சித்திர மாலையொடு சிறந்தொளி திகழ
          வளவிற் கமைந்த வாயிற் றாகி
 
        66 - 77 ; தீஞ்சுவை...,..வாயிற்றாகி
 
(பொழிப்புரை) நெல்லியினது திரண்ட காயாலியற்றிய மாலை களை உள்ளே குவித்துவைத்துக்கட்டிய கூடப்பரப்பினையும் வகுப்பறைகளியற்றி அவ்வறைகளினுள் எண்வகைப்பட்ட மங்கலப் பொருள்களையும் பொருந்த எழுதிப் பொருந்திய அழகினையும் ஓடவுத்தரத்தினையும் மணிகளிழைத்த நிலை யினையும், அந்நிலையின்கண் திண்ணிதாகக் கோக்கப்பட்ட இயந்திரமமைந்த செறிந்த நிலைமையினையுடைய பலகையி னிடத்தே கொடியும் சித்திரப் பத்தி்யும் விரித்து எழுதப்பட்ட ஒளிதிகழா நின்றவெள்ளிக் கதவினையும் பக்கங்களிலே வளைத்த முத்துமாலைகளையும் சித்திரமாலைகளையும் உடையதாய் அளவிற்குத் தகுந்தவாயிலையும் உடைத்தாய் என்க
 
(விளக்கம்) 66 - 67, நெல்லிக்காய் மாலைகளை அகத்தே குவித்து வைத்து இணைக்கப்பட்ட கூடப்பரப்பென்க. கூடமியற்றுங்கால் அவற்றின் உள்ளீட,ாக நெல்லிக்காய் மாலைகளைக் குவித்து வைத்துஇயற்றுவது வழக்கம் போலும்; கூடம்-ஓர் இல்லுறுப்பு.
    68. கட்டளை-வகுப்பறை.
    69. எட்டுவகைப் பெருஞ்சிறப்புக்களாவன; 'சாமரை, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்' என்பன. இவை சீவகசிந்தாமணி கோவிந்தை யாரிலம்பகத்தின் 64ஆம் செய்யுள் உரை மேற்கோளிற் காணப்படுவன
    இனி 'கடர் மண்டலஞ் சுரதுந்துபி தெய்வத் துவனி சிங்கப்,பிடர் மண்டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரின், அடர்மண்டல மழை அம்பொற்குடை மும்மையா மடியோம், இடர் மண்டலங் கெடுப்பாற் கிமையோர் செய்யும் எண் சிறப்பே' எனவரும் திருநூற்றந் தாதிச் செய்யுளுங் காண்க (80)
    70. ஒர் ; அசைச் சொல். ஓடவுத்தரம் - ஓருறுப்பு,
    71. மணிப்புதவு - மணிகள் பதித்த வாயில். ஈண்டு நிலை என்க
    72. பொறி - கதவு தாமே திறக்கவும் மூடவும் அமைந்த இயந்திரம் என்க
    73. வள்ளி. -கொடி. பத்தி- நிரல்பட எழுதிய சித்திரம்.
    75. வளைஇய  வளைத்துக் கட்டிய என்க. நித்திலத் தாமம். -முத்துமாலை.  
    76. சித்திரமாலை - வேறுபட்ட வண்ணமலர்களை விரவிப்புனைந்த மலர்மாலை. அங்ஙனமே புனைந்த மணிமாலைகளுமாம்.
    77. அளவிற்கு-அத்திருக்கோயிலின் அளவுக்கு (ஏற்ற அளவினை யுடைய வாயில் என்க ) வாயிற்று-வாயிலையுடையது,