உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
           நிலவிற் கமைந்த நிரப்பம் எய்தி
          மண்ணினு மரத்தினு மருப்பினும் அன்றிப்
    80    பொன்னினு மணியினுந் துன்னெழில் எய்தி
          அடியிற் கேற்ற முடியிற் றாகி
          அங்கண் மாதிரத் தணியழ குமிழும்
          பைங்கதிர்ச் செல்வனொடு செங்கதிர்க் கியன்ற
          வாலொளி மழுங்க மேலொளி திகழ
 
        78 - 84; நிலவில்..,,.,..திகழ
 
(பொழிப்புரை)  நில இல்லிற்குப் பொருந்திய சமனிலை எய்தப் பெற்று மண் மரம் யானைக்கொம்பு முதலியவற்றா லியற்றாமல் முழுதும் பொன்னானும் மணியானுமே இயற்றப்பட்டுச் செறிந்த அழகினை உடைத்தாய் அடிப் பகுதிக் கேற்ற உச்சியினையுடையதாய் வானத்திலே அழகிய ஒளியழகினை வீசாநின்ற திங்கள் மண்டிலத் தோடு ஞாயிற்று மண்டிலத்திற்கும் இயற்கையினமைந்த தூய ஒளிகள் மழுங்கும்படி அவற்றினும் உயர்ந்த.பேரொளி வீசி விளங்காநிற்ப,என்க.
 
(விளக்கம்) 78. நிலஇல் - நிலத்தின்கண் அமைக்கப்பட்ட இல்லம். கீழ்வீடு என்பது கருத்து. நிரப்பம் - சமம்.
    79..  மருப்பு - யானைத்தந்தம் முதலியன. துன்னெழில் - செறிந்த அழகு.
    81. அடி-கீழ்ப்பகுதி. முடி - மேற்குபகுதி. முடியிற்று- முடியினை உடையது.
    82. அங்கண் மாதிரம் - அழகிய இடமமைந்த வானம். அணிஅழகு - மிக்க அழகு; ஒருபொருட் பன்மொழி, ஈண்டு அழகு ஆகுபெயரான் ஒளியைக் குறித்து நின்றது.
    83. பைங்கதிர் செல்வன்-திங்கள். செங்கதிர்-ஞாயிறு
    84. வாலொளி-தூய ஒளி ; மேலொளி - மேம்பட்ட ஒளி.