உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          பத்திச் சித்திரப் பன்மணிக் கண்டம்
    90    வித்தக வண்ணமொடு வேண்டிடத் தழுத்தி
          அரும்பும் போதுந் திருந்துசினைத் தளிரும்
          பெருந்தண் அலரொடு பிணங்குபு குலாஅய்
          உருக்குறு பசும்பொன் உள்விரித்.தோட்டிக்
          கருத்தின் அமைந்த காம வள்ளி
    95    கோணச் சந்தித் தோரணங் கொளீஇ
          மாலை அணிநகை மேலுற வளைஇ
          நீலத் திரண்மணிக் கோலக் கருநிரை
          இடையிற் கேற்றுப் புடையிற் பொலிந்து
 
        89 - 98; பத்தி,,......பொலிந்து
 
(பொழிப்புரை)  நிரல்பட்ட சித்திரத் தொழிலமைந்த பலநிற மணித் துணுக்குகளை வேண்டுமிடமெல்லாம் பதித்து, அரும்பும் மலரும் தளிரும் ஆகிய இவற்றோடு கூடிய தாய்ப் பின்னி் வளைந்த பொன்னாலியற்றிய காமவள்ளி என்னும் கொடி வடிவத்தின் அமைந்த கோணங்களையும் சந்திகளையும் உடைய தோரணங்களை வேண்டு மிடமெல்லாம் கட்டி அவற்றின்மேற் பொருந்த முத்துமாலைகளை வளைத்துக் கட்டி மேலும் நீலமாகிய திரண்ட மணிகளாலியற்றிய அழகிய கரிய மாலைகளை இடையிடையே ஏற்பிக்கப்பட்டுப் பொலியா நிற்ப என்க. 
 
(விளக்கம்) 89. பன்மணிக் கண்டம்-பல மணிகளையும் பதித்த துண்டங்கள்,
    91. போது-மலர். பிணக்குபு-பிணங்கி; பின்னி. குலாஅய் -வளைந்து.
    93. உருக்குதலுற்ற பசிய பொற்குழம்பைக் .கருவினுள்ளே விரியச் செலுத்தித் தாம் நினைத்தபடி வார்த்து அமைந்த காம வள்ளி என்க. காமவள்ளி-கற்பகத் தருவின் மிசைப படர்வதொரு பூங்கொடி.அப்பூங்கொடி வடிவிலே அரும்பு முதலியவற்றோடு பொன்னாலியற்றப்பட்.ட, கோணமும் சந்தியும் உடைய தோரணம் என்க.
    96. மாலை அணி நகை - முத்து முதலியவற்றாலாய மாலையாகிய அழகிய அணிகலன்கள்.
    97. கோலக் கருநிரை-அழகிய கரிய மாலை;நிரல்படக்கோத்ததனை நிரை என்றார்.
    98. இடையிடையேஎற்பிக்கப்பட்டு. பொலிந்து -பொலியா நிற்ப