உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         விழைதகு விழுச்சீர் மந்த மாமலை
    100   முழையிற் போதரு முயற்சி போல
         முதனிலைப் பலகைச் சுவன்முத லோச்சி
         மூரி நிமிர்வன போலஏர் பெற்று
         வைந்நுதி யமைந்த வயிர வாயிற்
         கண்ணிழல் இலங்கும் ஒளியிற் றாகிப்
    105   பவழ நாவின் திகழ்மணிப் பகுவாய்ப்
         பசுமணிப் பரூஉச்செவிப் பன்மணிக் கண்டத்
         துளைமயிர் அணிந்த உச்சிக் கேற்ப
         வாய்புகு வன்ன வந்தொசி கொடிபோல்
         சென்றுசெறிந்து திடுகிய நன்றுதிரள் நடுவின்
 
        99 - 109; விழைதகு........நடுவின்
 
(பொழிப்புரை)  கண்டோர் விரும்பத்தகுந்த பேரழகுடைய பெரிய மலையினது முழையினூடே புகமுயலும் மெல்லிய முயற்சி உடையன போலத் தோன்றும்படி அடிப்பீடமாகிய பொற்பலகையினைப் பிடரின் மேற் போகட்டுச் சிறிது சோம்பல் தீர நிமிர்வன போலவும் அழகுபெற்று, கூரிய எயிறுகள் அமைந்தனவாக வயிரமணியாலே இயற்றப்பட்ட வாயினையும், சுடர்வீசி விளங்கும் கண்களையும் பவழத்தாற் செய்த நாவினையும் விளங்குகின்ற மணி யாலியற்றிய பிளந்த வாயினையும் பச்சைமணியாலே இயற்றப்பட்ட பரிய செவியினை யும் பல மணிகளானும் இயற்றப்பட்ட உச்சியின் அழகுக் கேற்பப் பிடரிமயிரானே அழகுசெய்யப்ட்டனவும் தம் வாயினுள்ளே புகுமளவின போன்று இடுகியனவும் கொடிபோன்று நீண்டு நன்றாகத்திரண்டனவு மாகிய இடையினையும், (உடையவும்) என்க.
 
(விளக்கம்) 99, விழைதகு -விழைதற்குத் தகுந்த. விழுச்சீர் சிறந்த அழகு. மந்த முயற்சி என ஒட்டுக, மாமலை - பெரிய மலை.
    100-102   முழை-குகை. முயற்சியை உடையன போலத் தோன்றும்படி பலகையைப் பிடரின் மிசை அமைத்து, என்பது கருத்து.
    அரியணை தாங்கும் நான்கு அரிமான்களில் பின் பகுதியைத்தாங்கும் இரண்டு அரிமான்களின் தோற்றம் இஃது; இனி முன்பகுதியைத்தாங்குவன மூரிநிமிர்வன போன்ற தோற்றமுடையன என்று நினைக.
    முதனிலைப் பலகை-அடிப்பீடமாகிய பலகை. சுவல் - பிடரி. மூரி-சோம்பல். ஏர்-அழகு.
    103. வைந்நுதி ; அன்மொழித்தொகை. கூர்ந்த நுனியை யுடைய எயிறு என்க. நிழல் இலங்கும் கண்ணுடைமையானும் ஒளியிற்றாகி என்க. ஒளியிற்று: ஒருமைப்பன்மை மயக்கம் நிழல்- ஒளி.
    105. பகுவாய்-பிளந்த வாய். பசுமணி--பச்சைமணி. அஃதாவது -மரகதமணி என்க. பரூஉச்செவி - பரிய செவி.
    107. உளைமயிர்-பிடரிமயிர் உச்சியின் அழகுக்கேற்ப உளைமயிர் அணிந்த என மாறுக. அணிந்த-அணியப்பட்ட.
    108 வாய்புகுவன்ன - தத்தம் வாயிலே தாமே புகுந்துவிடுவனபோன்று இடுகிய என்க. இடுகிய-சிறுத்த. சிங்கத்தின் இடைமிகச்சிறிதும் வாய்மிகப் பெரிதுமாதல் ஒருங்கே தோன்ற ''வாய் புகுவன்ன,''என்றார். கொடி-பூங் கொடி. சென்று என்பது நீண்டென்றபடியாம்.நடு -இடை.