உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         
    110   நகைமணிக் கோவை தன்கைக் கேற்பப்
         பரூஉத்திரள் குறங்கின் பளிக்குமணி வள்ளுகிர்த்
         திருத்தஞ் செறிந்து திகழ்ந்துநிழல் காட்டும்
         உருக்குறு தமனியத் தொண்பொன் கட்டில்
         அணிப்பொலிந் தியன்ற அழல்உமிழ் அரிமான்
    115   உச்சியிற் சுமந்துகொண் டோங்குவிசும் பிவர்தற்கு
         நச்சி யன்ன உட்குவர் உருவின்
 
        110 - 116 : நகைமணி........உருவின்
 
(பொழிப்புரை)  அழகிய மணிக்கோவைகளானே இயற்றப் பட்ட. தங்கால்களுக்கேற்ப மிகத்திரண்ட. துடையினையும் உடையனவுமாகிய பளிங்காகிய மணிகளால் இயற்றப்பட்ட பெரிய நகங்களும் திருத்தமாய் நெருங்கப்பட்டு, விளங்கிக் காண்போர் நிழலுருவத்தைத் தன்பாற் காட்டாநின்ற உருக்குத லுற்ற பொன்னாலியற்றப்பட்ட ஒள்ளிய பொற்கட்டில் அழகானும் பொலிவுற்று இயன்ற சினத்தீக்காலும் அரிமான்கள் தம் உச்சியிலே சுமந்து கொண்டு உயர்ந்த வானிடத்தே செல்லுதற்கு விரும்பியிருந்தாற் போன்று காண்போர்க்கு, அச்சம்வருதற்குக் காரணமான வடிவத்தை யுடையவாய் (தருமானாசனம்) என்க.
 
(விளக்கம்) 110. தகை-அழகு. தகைந்ந மணிக் கோவையுமாம்.தன்கை - என்புழித், தன்: ஓருமைப்
  பன்மை மயக்கம். கை என்றது -முன் கால்களை.
    111- பரூஉத்திரள்-பருத்துத் திரண்ட என்க. குறங்கு -துடை,பளிக்குமணி;-பளிங்காகிய மணி. மென்றொடர் அல்வழியில் வன்றொடராயிற்று எற்புடம்பு அற்புத்தளை குரக்குமனம் என்பனபோல் வள். உகிர்-பெரிய நகம்.
    114. அரிமான்- சிங்கம்.
    115. விசும்பிவர்தற்கு - வானின்கட் செல்வதற்கு.
    116, நச்சியன்ன - விரும்பி யிருந்தாற் போன்ற. உட்குவரும் -உட்குவர் என ஈறுகெட்டு நின்றது. அச்சம் வருதற்கு காரணமான என்க.