உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          தொடையமை கோவை துளங்குமணிப் பன்னகை
         முகிழ்முடிச் சிறுநுதன் முதிரா இளமை
    135   மகிழ்நகை மங்கையர் மருங்கணி யாக
         புடைதிரண் டியங்கும் பொங்குமணிக் கவரி
         அடைவண் டோப்பும் அவாவினர் போல
         எழின்மணி இயக்கத் தொழில்கொண் டீய
 
        133 - 138; தொடை......தொழில்கொண்டீய
 
(பொழிப்புரை)  தொடுத்தலமைந்த மாலையினையும், விளங்கா நின்ற பலவாகிய மணியணிகலன்களையும் கூம்பிய முடிக்கலனையும் சிறிய நுதலினையும் மூவாத இளமையினையும் மகிழ்ச்சியாலுண்டான முறுவலையும் உடைய தேவமகளிர் பக்கங்களிலே வரிசையாக நின்று அங்கு மொய்த்துள்ள வண்டுகளை ஓப்புதற்கு அவாவுற்றார் போன்று பக்கங்கள் திரண்டு இயங்கா நின்ற மணிப்பிடியமைந்ந சாமரைகளையும் அழகிய (ஒலி) மணிகளையும் கைப்பற்றி இயக்கும் அத்தொழிலை மேற்கொண்டிரா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) 133. தொடை-தொடுத்தல். துளங்கும்-அசையாநின்ற, மணிப்பன்னகை -மணியாலியற்றப்பட்ட பலவாகிய அணிகலன்.
    134. முகிழ்முடி ; வினைத்தொகை. முதிராவிளமை - மூவாத இளமைத்தன்மை. அமரர் மகளிராதலின் மூவாமை கூறினார்.
    135. மகிழ்நகை - மகிழ்ச்சியாலுண்டான புன்முறுவல்,
    136. பக்கங்கள் திரண்டமைந்த இயங்கா நின்ற மிக்க மணிகளை யுடைய சாமரையினையும் என்க,
    137. ஓப்பும் - ஓச்சும். அவாவினர் - விருப்பமுடையோர்.
    138, எழில்மணி-அழகிய ஒலிமணி. இயக்கு அத்தொழில் கொண்டீய எனக் கண்ணழித்து இயக்கா நின்ற அத்தொழிலை மேற்கொள்ளாநிற்ப என்க (கந்தருவமகளிர் ஓவியங்கள்)