உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          மணிவிளக் குமிழும் அணிநிலாச் சுவர்மிசை
    140    வலத்தாள் நீட்டி இடத்தாள் முடக்கிப்
          பொன்பொலிந் தியலும் பொங்குபூந் தானைப்
          பசும்பொற் கச்சை பத்தியிற் குயின்ற
          விசும்பக நந்தும் வேட்கையர் போலத்
          தாமரைத் தடக்கையில் தாமம் ஏந்தி
    145    விச்சா தார்நகர் எச்சாரு மயங்கி
          நீனிற முகிலிடைக் காமுறத் தோன்ற
 
        139-146; மணிவிளக்கு......தோன்ற
 
(பொழிப்புரை)  மணிவிளக்கங்கள் சுடர்வீசா நின்ற அழகிய ஒளியையுடைய சுவரின்மேல் விச்சாதரர் மகளிர் எல்லா விடங்களினும் பொருந்தித் தம் வலக்காலை நீட்டி இடக் காலை முடக்கிக் கூத்திடுவாராகப் பொன்னிறத்தானே பொலிவுற்று விளங்காநின்ற மிக்க பூத்தொழிலையுடைய ஆடையினையும் பொற்கச்சையினையும் உடையராய் விண்ணுலகம் கலைத்தொழிலானே  பெருகுதற் காரணமான வேட்கையினை உடையர்போலத் தாமரைமலர் போன்ற தமது பெரிய கையில் மாலையை ஏந்திக்கொண்டு நீலநிறமுடைய முகில்களினூடே காணப்படுபவராய் வரிசை வரிசையாக வரையப் பட்ட ஒவியங்கள் காண்போர் விரும்பும்படி தோன்றாநிற்ப என்க.
 
(விளக்கம்) 139, அணிநிலா-அழகிய ஒளி.
    140. வலத்தாள்- வலக்கால். இடத்தாள்-இடக்கால்.
    141. பூந்தானை - பூத்தொழிலமைந்த ஆடை.
    142. பத்தியிற்குயின்ற -நிரலாக எழுதப்பட்ட
    143. விசும்பகம்-வானம். நந்தும் - பெருகும்.
    145 விச்சாதரர்- கந்தருவர்- (ஈண்டு மகளிர்). எச்சாரும்-எல்லாப் பக்கங்களிலும். மயங்கி-பொருந்தி
    146., காமுற -கண்டோர் விரும்பும்படி. காமுற (142) பத்தியிற் குயின்ற என ஒட்டுக