உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
           அழகுபடப் புனைந்த அலங்குமணித் தவிசின்மிசை
           நிறைகதிர் வெண்மதி நிலாவொளி விரிந்து
           முறையின் மூன்றுடன் அடுக்கின போலத்
           தாம முக்குடை தாமுறை கவிப்ப
    155     உலக வெள்ளத் தாழும் பல்லுயிர்க்
           கலகை ஆகிய அருந்தவக் கிழவனை
           இருக்கை இயற்றிய திருத்தகு செல்வத்
           தாரணங் காகிய அணிகிளர் வனப்பிற்
           பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறித்
    160     திருமணி அடக்கிய செம்பொற் செப்பின்
           அருமணி சுடரும் அராஅந் தாணம்
 
           (அராஅந்தாணம்)
          151 - 161 ; அழகு...,.,,..,அராஅந்தணம்
 
(பொழிப்புரை)  இங்ஙனம் அழகுண்டாக ஒப்பனை செய்யப் பட்ட அசையா நின்ற மணிகளாலே இயற்றப்பட்ட இருக்கை யின் மேல் நிலாவொளி விரிந்த நிறை கதிரையுடைய மூன்று முழுவெண்டிங்கள் மண்டிலங்களை ஒருங்கே ஒன்றன்மேலொன்றாய் அடுக்கி வைத்தாற் போன்ற மாலையையுடைய முக்குடைகள் முறை யாகநிழற்றா நிற்பப் பிறவிப் பெருங்கடலிலே ஆழாநின்ற பலவாகிய உயிர்களும் அக் கடலினின்றும் உய்ந்து கரையேறு தற்கோர் எல்லை யாகிய இறைவன் இருத்தற் பொருட்டு இயற்றப்பட்ட தெய்விகமான ஒப்பனை கிளாராநின்ற அழகினையுடையதும் இறைவனது முழுப் பண்பினையும் புகழ்ந்து பாராட்டுதற்குக் காரணமானதும் அழகிய மாணிக்க மணியைத் தன்னகத்தே கொண்டுள்ள பொற்செப்புப்போன்று பெறற்கரிய மணிபோன்ற இறையுருவத்தைத் தன்பாற் கொண்டதுமாகிய அரா அந்தாணத்தின் கண் என்க
 
(விளக்கம்) 154. தாம் ; அசைச்சொல்.
    155. உலகம் ; ஆகுபெயர் பிறவிப் பெருங்கடல் என்க.அலகை - எல்லை, முடிவிடம்,
    156. பொறி வாயிலைந்தவித்தான் என்றாற்போன்று இறைவனை அருந்தவக் கிழவன் என்றார் ஐ; சாரியை.
    157. இருக்கைக்கு இயற்றிய என்க. இயற்றிய (161) அருமணி என்று இயையும்,
    159. பூரணம் பொலிமை- முழுப்பொலிவு. மீக்கூறி என்னும் எச்சத்தைக் கூற என்று செயவெனெச்சமாக்கிக் காரணப் பொருட்டாகக் கொள்க.
    160 திருமணி-அழகிய மணி, இஃது இறைவன் திருவுரு வத்திற்கும்,  செப்பு - அராஅந்தாணத்திற்கும் உவமை,
    161. அருமணி - அன்மொழித்தொகையாய் இறைவன் திருவுருவத்தைக் குறித்து  நின்றது,